Thursday, December 14, 2006

காதல் அழகானது, காதலிக்கப்படுபவர் அல்லர்

தற்போது என் அலுவலக நண்பனுடன் (கேரளத்தில் இருந்து வந்தவர்) பேசிக்கொண்டிருந்த போது பேச்சு கேரள நடிகர் முகேஷ் பற்றி போனது. முகேஷும் நடிகை சரிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரு முறை அவன் நண்பன் கொச்சினில் உள்ள ஒரு விமான நிலையத்தில் முகேஷை பார்த்ததாகவும், அப்பொழுது அவர் பின்னால் சற்று தள்ளி அவர் மனைவி சரிதா வந்துகொண்டிருந்ததாகவும் கூறினார். ஆனால், அவர் சொன்னது, சரிதா உடல் சற்றே குண்டாக இருப்பதாலும், அவ்வளவாக அழகாக இல்லாததாலும் அவருடன் வர சங்கடப்பட்டுக் கொண்டு முகேஷ் சற்று முன்னால் வந்ததாக கூறினார். அப்புறம் ஏன் அவளை திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சற்றே வியப்பாக இருந்தது. காரணம், அவர் கூறியதன் பொருள், 'அழகாக இருப்பவர்கள்/களை தான் காதலிக்க வேண்டும்' என்று நினைக்கிறேன். அவரிடம் கேட்டதற்கு அவரும் அவ்வாறே கூறினார் (நானும் முன்னெல்லாம் அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன்).

அவர் கூற்றுப் படி அழகாக இருப்பவளைத்தான் காதலிப்பார்களா என்று கேட்டேன். அவரும் குழப்பமாக ஆமாம் என்பது போல ஆமோதித்தார். அப்படிப் பார்த்தால் உலகில் காதலிப்பவர்கள் எல்லோரும் அழகாகவா இருக்கிறார்கள்? இல்லையே. எல்லோரும் ஐஸ்வர்யா ராயாகவோ அல்லது சல்மானாகவோ விவேக் ஓபிராயாகவோ அபிஷேக்காகவோ இல்லையே!!! அழகு என்பது உடலில் இல்லை. ஐஸ்வர்யா ராயையே கல்யாணம் செய்துகொண்டால் கூட பிடிக்கவில்லை என்றால் எவ்வளாவு நாள் தான் வாழ முடியும்?

என்னைப் பொருத்த வரை அழகு என்பது 90% மனதில் தான் இருக்கிறது. ஒரு பெண் நம்மை கடந்து செல்கிறாள் என்றால் அவள் புற அழகு அவளை ஒருமுறை திரும்ப பார்க்கத் தூண்டும். திரும்பிப் பார்ப்பீர்கள். அதற்காக அவள் உங்களை கடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள்? ஒரு கட்டத்தில், புற அழகு உங்களுக்கு கட்டாயம் அலுப்பைத் தந்துவிடும். ஆக, புற அழகு என்பது ஒருமுறை பார்க்க வைக்கும் visiting card. அவ்வளவே. நம்ம மூக்காயி கருப்பாயி எல்லாம் காதலிக்காதவர்களா என்ன? பெங்களூருவில் இருக்கும் என் நண்பன் ஒருவன், நான் சென்னைக்கு மாற்றலாகி வந்த சில நாட்கள் கழித்து என்னைப் பார்த்து, 'அப்பாடா! என்னை விட நீ கருப்பாக ஆகிவிட்டாயே!' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான் (விளையாட்டாக தான்). நான் மனதில் சிரித்துக் கொண்டேன்.

நான் பெரும்பாலும் பார்ப்பவை எல்லாவற்றையுமே ஒரு சர்வேயாக பார்க்கும் பழக்கம் உடையவன். என் மனதில் எப்பொழுதும் ஏதாவது ஒரு சர்வே ஓடிக்கொண்டிருக்கும். என் சர்வேக்களின் முடிவு தான் இந்த பதிவும். அழகில்லாதவளையே கல்யாணம் செய்துகொண்டாலும் கூட, சில நாட்களுக்குத் தான் பிடிக்காமல் போகும். பின் அந்த பெண் / ஆணுடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்கு பிடித்து விட்டால் பின் அழகு என்பதையே மறந்து விடுவீர்கள். இது என் நண்பனிடத்தில் நான் கண்ட உண்மை. திருமணத்திற்கு முன் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. இதை நேரடியாக அவனுக்கு புரியவைக்க முடியவில்லை. என் அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா 'கல்யாணம் ஆனால் அதெல்லாம் சரியாகிவிடும்' என்றாள். ஆனால் அவன் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை. ஜாதகம் முதலிய சில நிர்பந்தங்களால் திருமணம் நடந்தது. அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தான். பின், ஒரு நாள் அவன், காத்துகொண்டிருந்தது போல, வசமாக என்னிடம் மாட்டினான். அவனிடம் இப்பொழுது உன் மனைவியின் அழகு பிடிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவன், அப்படியெல்லாம் இல்லையென்றும், எல்லாவற்றையும் அனுசரித்து போவதானவும், நல்ல பெண்ணாக(!) இருப்பதாகவும் கூறினான். (பின் அவன் வீட்டில் நடந்த மாமியார் மருமகள் பிரச்சினையில் குடும்பமே மருமகளுக்கு சப்போர்ட்டாக இருந்தது).

என் மற்றொரு நண்பன் ஒருவன் சன் மியூசிக்-ல் வரும் ஒரு பெண்ணை பார்த்தால், 'என் ஆளு வந்துட்டா' என்பான். அந்தப் பெண்ணை அவன் முதலில் பார்த்த பொழுது 'சன் மியூசிக்கில் ஃபிகர் செலக்ஷனே சரியில்லை' என்று கமென்ட் அடித்திருக்கிறான். அவனுக்கு அது நியாபகமில்லை. அவனிடம் கேட்டேன், 'ஒரு வேளை இந்தப் பெண்ணை முதல் முதலாக பார்க்கும் பொழுதும் இதே தான் சொல்லியிருப்பாயா?' என்றேன். அதற்கு அவன், 'ம்ஹூம்...ஆனா, அது ஏன்டா?' என்று என்னிடமே திருப்பிக் கேட்டான். அவனுக்கு புரியவில்லை. அழகில்லாதவர்களை முதல் முதலில் பார்த்தால் பிடிக்காமல், ஏன் சிலருக்கு அருவருப்பாகக் கூட தோன்றும். ஆனால், அவர்களிடம் நாம் பழக பழக சில நாட்களில் அவர்களிடம் உள்ள குறைகள் எல்லாம் சூரியன் வந்ததும் உருகிவிடும் பனியை போல உருகிவிடும். காரணம், குறைகள் என்று நாம் நினைத்திருப்பவை நமக்கு பழக்கப்பட்டிருக்கும். அது நம் மனதில் இருந்து விலகிவிடும். அவனுக்கு இதை விளக்கினேன்.

என் நண்பன் ஒரு பெண்ணை விரும்பினான். அவள் பார்ப்பதற்கு ஒன்றும் அழகில்லை (அதாவது நம்ம கண்களின் படி). ஆனால், அவளை காதலித்தான். பேச்சு திருமணம் செய்து கொள்வது வரை சென்றது. பின் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. ஆனால், ஒருவன் கேட்கும் பொழுது பெண் எப்படி இருப்பாள் என்று கேட்க, இவன் கொஞ்சம் போல கருப்பாக, சற்றே பூசினாற் போல இருப்பாள் என்று கூறினான். அதற்கு அவன், 'அப்புறம் ஏன் அவளை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாய்?' என்று கேட்டிருக்கிறான். எங்கு போய் சொல்வது? சிரிப்பு தான் வந்தது.

ஒரு முறை எங்கள் ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் கண்டது. எங்கள் ஊர் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத சிறிய ஊர். ஊரை சுற்றிலும் சில கிராமங்கள் (10+) இருக்கிறது. அதானாலேயே என் ஊர் பெயர் 'திருப்பத்தூர்'. அங்கு ஒரு கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு பெண் பேருந்து புறப்படும் பொழுது வண்டியில் இருந்து இறங்கி வந்து, கசங்கிய தாள்களாக 20 ரூபாய் கொடுத்து 5 ஃபேர் & லவ்லி வாங்கி போனாள். எங்கோ விழாவுக்கு போகிறாள் போல. அந்தப் பெண் ஒன்றும் வசதியான பெண் அல்ல. நம் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தான் உலகத்தை அவளுக்கு காட்டும் கண்ணாடிகள். இந்த ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவளை எந்த அளவுக்கு அவள் நிறத்தின் மேல் ஒரு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள். பரிதாபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தது தவிற ஒன்றும் செய்ய முடியவில்லை என்னால். முதலில் இப்படிப்பட்ட விளாம்பரங்களை தடை செய்ய வேண்டும். இன்னும் கூட நம் திரைப்படங்களில் கதாநாயகியாக வெள்ளை தோலுடைய பெண்ணை தானே பார்க்கிறோம். கருப்பாக இருந்தால் அவள் கதாநாயகனின் தங்கை ஆகி விடுகிறாள். இந்த விஷயத்தில் சரிதாவிற்கும், அர்ச்சனாவிற்கும் ஒரு Hats-off.

'காதலுக்கு கண்ணில்லை' என்பது அடுத்தவர் கண்களுக்கு. காதலிப்பவர்களுக்கு அல்ல. நம் மக்களின் கூற்றுப்படி அழகு என்பது வெறும் நிறத்தில் அல்லவா இருக்கிறது? 'நம்ம ஊர் கலரே கருப்புதான். அதை பிடிக்கவில்லையா' என்று விவேக் சொல்வது தான் நியாபகத்திற்கு வருகிறது. எல்லா அம்மாக்களும் பெண் பார்க்கும் பொழுது, பெண் இன்னும் கலராக இருந்தால் தேவலை என்று தானே சொல்கிறார்கள்.

இப்பொழுது இயந்திர கதியில் தான் காதல் வருகிறது. அதுவும் முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையில். இந்தத் துறை வந்த பிறகு காதல் கல்யாணங்களின் எண்ணிக்கை என்னவோ உயர்ந்துவிட்டது தான். ஒரே ஆறுதல், கலப்பு திருமணங்களும் இதில் அடக்கம் என்பது. ஆனால் இந்தத் திருமணங்கள் காதல் திருமணங்களா என்று என்னை கேட்டால் சிரிப்பை தான் உதிர்ப்பேன். இவை பெரும்பாலும் 'மேட் (made) ஃபார் ஈச் அதர்' இல்லை, 'மேட் (mad) ஃபார் ஈச் அதர்' தான். மாற்றி மாற்றி ஏமாற்றி கொள்கிறார்கள். கவிதா சொன்னது போல, இது வெறும் MATCHING. அவ்வளவே. 'ரெண்டு பேரும் ஐ.டி.யா? ஓ.கே. இரண்டு சம்பளமா? ஓ.கே. ஒரே கம்பேனியா? ஓ.கே. ஒத்து வருவாளா? ஓ.கே. அப்ப காதலிக்கலாமா? ஓ.கே'. இது தான் நடக்கிறது. அதுவும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்து இருக்கிறதே? ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் ஒரு இலட்சம் முதல் பணம் வேறு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் (இன்ஃபோசிஸ்ல்). உண்மையா தெரியவில்லை. காரணம், ஒரே கம்பெனி என்றால் அதிக காலம் அதே கம்பெனியில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை. அதனால் தான் இன்ஃபோசிஸ்ல் ஒரு மேட்ரிமோனியல் வலை கூட இருக்கிறது. இவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு சர்வே படி குறைந்தது 18 மாதங்கள் காதலித்திருந்தால் தான் அவர்களின் திருமணம் வெற்றி பெறுகிறது என்று கணித்திருக்கிறார்கள், இங்கல்ல இங்கிலாந்தில். இல்லாவிட்டால் காலையில் திருமணம், மாலையில் விவாகரத்து நோட்டீஸ் என்று ஏன் நடக்க போகிறது? (இந்த விஷயத்தில், நம் ஊரிலாவது பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் தலையெழுத்தே என்று வாழ்ந்து தான் தீரவேண்டும் என்ற Security இருக்கிறதே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்).

சமீபத்தில் ரசித்தது, ஸ்பைடர்மேன் II திரைப்படம். அதில் வரும் கதாநாயகி ஒரு வேளை கருப்பு தோலுடன் இருந்திருந்தால் அவள் நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்துப் பெண் போல தான் இருந்திருப்பாள். காசினோ ராயல் கதாநாயகி கூட பிரமாதமான அழகு கிடையாது. GODS must be crazy-ல் ஒரு ஆப்ரிக்க பழங்குடியினர் தான் கதாநாயகன். பார்க்க நோஞ்சானாக இருப்பார். என் வீட்டில் அந்த படத்தின் டி.வி.டி-யை காண்பித்த பொழுது அந்த படத்தை யாரும் பார்க்க இசையவில்லை. பின் அந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தவுடன் அவர்களுக்கு அந்த படத்தை மிகவும் பிடித்து விட்டது. எங்கோ கேள்விப்பட்டது, எந்த ஹாலிவுட் கதாநாயகிகளும் படம் முடியும் பொழுது அழகாகவே தெரிவார்கள். காரணம் அவர்களின் கதாபாத்திரம் தான்.

The Brief History of Time என்னும் பெஸ்ட் செல்லர் புத்தகத்தை எழுதிய கோட்பாட்டு இயற்பியலாளர் Stephen Hawking மோட்டோர் நியூரோன் என்னும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர். கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் வேலை செய்யாமல் ஒரு இயந்திர சக்கர நாற்காலியை மட்டுமே துணையாக வைத்து சாதனை படைத்தவர். அவரையும்(!) காதலித்து திருமணம் செய்து கொண்டாள் ஒரு பெண்.

(சில நேரங்களில் 'சார்! என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை' என்று நாமே கடிதம் போடுவோமே. அப்படித்தான் சில விஷயங்களும். கண்டுக்காதீங்க...ஆங்...)

Friday, December 08, 2006

ரோமன் ஹாலிடே (1953)

திரைக்கதையை அழகுடன் சொல்ல சற்றே நீளம் தேவைப்படுகிறது.

1953-ல் வந்த கருப்பு வெள்ளை படம் 'ரோமன் ஹாலிடே' (Roman Holiday). சில ஆஸ்கர் விருதுகளையும், மற்றும் பல விருதுகளையும் குவித்த படம். இப்படத்தின் கதாநாயகி ஆட்ரே ஹெபன், பெல்ஜியத்தில் பிறந்த, உலகின் மிக அழகிய பெண் என அழைக்கப்படுபவர் (உண்மையாவே அடித்துப் போடும் அழகு). இந்தப் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றவர். பிற்பாடு, 1993-ல், புற்றுநோயால் இறந்தார்.



24 மணிநேரம் நடைபெறும் கதை, படம் முழுவதும் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் படமாக்கியிருக்கிறார்கள். கதை பிரித்தானிய இளவரசி மார்க்கரெட் பற்றின படம் என்று கூட கிசுகிசுக்கிறார்கள். முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது. இங்கே கதாநாயகி ஒரு பெயர் சொல்லப்படாத நாட்டின் பட்டத்துக்கு வரப்போகிற 'அழகான' இளவரசி. கதாபாத்திரத்தின் பெயர் ஆன் (Ann). இளவரசி நல்லெண்ண பயணமாக ஐரோப்பிய தலைநகரங்களுக்கு பயணமாகிறார். இங்கிலாந்து, ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் சென்று பின் கதை நிகழும் ரோம் நகரத்திற்கு பயணம். அங்கே தூதரகத்தில் பல நாட்டு அரசியல் தலைவர்கள், விருந்தினர்களுடன் ஒரு சந்திப்பு. இளவரசியின் நீண்ட கவுனுக்கு அடியில், அவள் பாதங்கள் மண்ணில் நிலை கொள்ளாமல், வலியாலும் சோர்வாலும் ஆசுவாசப்படுத்துக் கொள்ளும் வேளையில் தன் ஒரு காலின் காலணியை நழுவ விடுகிறாள். பின் அங்கிருக்கும் விருந்தினர்களுடம் நடனம் ஆடும் தோரணையில் காலணியை மீட்டெடுக்கிறாள்.



பின் இரவு உணவு முடிந்து தூங்கப் போகும் பொழுது, நைட் கவுன் பிடிக்கவில்லை, பைஜாமா வேண்டுமென்று கேட்கிறாள். அவள் கேட்பது கிடைக்கவில்லை. வெளியில் சன்னலில் ரோம் நகரத்து இரவு வாழ்க்கையின் ஒரு பகுதியை பார்க்கிறாள். பின் அவளுக்கு இளஞ்சூடான பாலும், பிஸ்கட்டும் (crakers) கொடுக்கிறார்கள். மறுநாளைய அலுவலை பட்டியலிடுகிறார்கள். இதை படிக்க கேட்க கேட்க, தன் வாழ்க்கையின் கட்டுபெட்டித்தனத்தையும், தன் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையை எண்ணியும் கத்துகிறாள். அவளை தூங்க வைக்க மருத்துவர் மயக்க ஊசியை போட்டு விட்டு தூங்கச் சொல்கிறார். மயக்கத்தில் பிதற்றுகிறாள் (உபயம், 23ம் வடிவேலு). அந்த அளவுக்கு மனச்சோர்வு.

தன்னை அலைக்கழிக்கும் வாழ்க்கையின் பிடியில் இருந்து சுதந்திரம் வேண்டுகிறது அவள் மணம். அந்த இரவு யாருக்கும் தெரியாமல் (தெரிந்தா விடுவாங்களா?) தூதரகத்தில் இருந்து தப்பிக்கிறாள். வெளியே செல்ல தயாராக நின்று கொண்டிருக்கும் ஒரு குப்பை லாரியில் பின் பக்கம் உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறாள். முதல் முறையாக தன்னை சுற்றிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாத, எதையும் formal-ஆ செய்யும் கட்டுப்பாடுகள் இல்லாத பயணம் அது ('மே மாதம்' நினைவுக்கு வந்தால் நான் பொருப்பல்ல). மூடும் தூதரகத்தின் கதவுகளை பார்த்து புன்னகையுடன் அவள் பயணம் இனிதே தொடங்குகிறது!

லாரி ஒரு இடத்தில் நிற்கும் பொழுது குதித்து விடுகிறாள். மயக்க ஊசியின் கைங்கரியத்தால் தூக்கம் கண்களை சுழற்ற அங்கிருக்கும் ஒரு பூங்காவின் (குட்டை) சுவற்றில் படுத்து உறங்குகிறாள். அந்தப் பக்கம், கிளப்பில் சீட்டாட்டம் முடிந்து வெளியே தன் வீடு நோக்கி வருகிற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜோ ப்ராட்லீ (Joe Bradley), ஒரு அழகான பெண் அங்கே படுத்துக்கொண்டிருப்பதை பார்க்கிறான். அவள் அழகைப் பார்த்து ஒரு கணம் நிற்கிறான். அவள் திரும்பிப் படுக்கும் பொழுது கீழே விழுவதாகப் பட, அவளை எழுப்புகிறான். அழகான மேட்டுக்குடி பெண்ணைப் போல இருக்கிறாள், ஆனால் குடித்துவிட்டவளைப் போல இங்கே படுத்திருக்கிறாளே என்று பரிதாபப்பட்டு அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். அவளிடம் பணம் இல்லை என்று தெரிகிறது ("ஐ நெவர் கேரி மனி"). ஒரு டாக்ஸியை அழைத்து அவளையும் ஏற்றி விட்டு எங்கே செல்வதென்று கேட்கிறாள். அவள் 'Coliseum' எனக் கூற குழப்பம் அடைந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அந்த இரவு அங்கே தங்க வைக்கிறான்.

வீட்டில் அவளுக்கு தன் மாற்று உடையை கொடுத்து உடை மாற்றிக் கொள்ள சொல்லுகிறான். நைட் கவுன் இல்லையா என்று கேட்கிறாள். அவன் இல்லை என்று சொல்கிறான். தன் இரவு உடையை கொடுக்கிறான். அவளுக்கு பிடித்த, அரண்மனையில் கிடைக்காத நிறம். பின் தன் உடை மாற்ற உதவும் படி கேட்கிறாள். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு அவள் கழுத்து டையை (necktie) மட்டும் கழற்றி மற்றதை அவளையே பார்த்துக் கொள்ளுமாறு கூறி வெளியே காபி குடிக்க நழுவி விடுகிறான். போகும் பொழுது தன் படுக்கையில் படுக்க வேண்டாமென்றும், அங்கே இருக்கும் ஸ்டெரெச்சர் போன்ற ஒரு சோபாவில் (couch) படுக்குமாறும் கூறிச் செல்கிறான். பின் அறைக்குத் திரும்பும் பொழுது, அவள் தன் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்து, அதன் அருகில் அந்த சோபாவை வைத்து, கட்டிலில் இருக்கும் அவளை ஒரே உருட்டலில் சோபாவிற்கு உருட்டுகிறான் (இது ஒரே shot-ல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி).

மறுநாள் காலை 11:45-க்கு இளவரசியுடன் இருக்கும் இன்டர்வியூவை மறந்து மிகவும் தாமதமாக எழுகிறான். பின் அவசரமாக அலுவலகத்திற்கு செல்கிறான். அன்றைய செய்தியில் முக்கியமான செய்தி, இளவரசி திடீரென்ற காய்ச்சலினால்(?) அன்றைய அலுவல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்ற செய்தி. இதை அறியாமல், ப்ராட்லீ தன் பாஸிடம் இப்பொழுது தான் இளவரசியுடன் நேர்காணல் முடித்து வருவதாக "a gold-plated, triple-decked, star-spangled lie"-கிறான். பின் நாளிதழ்களில் வந்த செய்தியைப் பார்த்து தன் வீட்டிலிருப்பது இளாவரசி என்று உணர்ந்து நேரே தன் அடுக்ககத்தின் காவலாளியை ஃபோனில் அழைத்து தன் அறையில் இருப்பவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது, யாரும் தன் அறைக்குள் செல்லக்கூடாதென்று பாதுகாப்பு கொடுக்கும் படி கூறுகிறான். பின் தன் பாஸிடம் வந்து, இளவரசியுடம் நேரடியான, எக்ஸ்க்ளூசிவான படத்துடன் கூடிய பேட்டிக்கு பேரம் பேசுகிறான்.

பின் தன் வீட்டிற்கு 1:30-க்கு வந்தால் அப்பொழுது தான் இளவரசி எழுந்திருக்கிறாள். பின் அவர்களுக்கிடையில் அழகான உரையாடல். அவள் தன்னை அன்யா ஸ்மித் ('Anya Smith')-ஆக அறிமுகம் செய்துக் கொள்கிறாள். ப்ராட்லீ தனக்குத் தெரிந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவள் இஷ்டப்படி விட்டுவிடுகிறான். அவள் குளிக்கும் நேரம் பார்த்து வெளியே வந்து தன் பாப்பரசி புகைப்படம் எடுக்கும் தன் நண்பண் இர்விங் ராடோவிச் (Irving Radovich)-க்கு ஃபோன் செய்து "தலைப்பு செய்தி, புகைப்படம் தேவைப்படும்" என்றும் மிக அவசரமாக வரும் படி சொல்கிறான்.

ஆன் குளித்து முடித்து, அந்த வித்தியாசமான சூழலை கண்டு வெளியே சுற்றிப் பார்க்க கிளம்புகிறாள். அவளை முன்னே போகவிட்டு ப்ராட்லீ அவளுக்குத் தெரியாமல் பின்தொடருகிறான். அவனிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு (திருப்பிக் கொடுக்க விலாசமெல்லாம் வாங்கிக் கொண்டு வேறு) அங்கிருக்கும் மார்க்கெட் செல்லுகிறாள். தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். முதல் வேளையாக அங்கிருக்கும் மரியோ டெலானி-(Mario Delani)யின் சலூனுக்கு சென்று தன் முடியை வெட்டிவிடுமாறு கூறுகிறாள். மரியோவுக்கு அந்த அழகான முடியை அவள் வெட்டுவதில் மனக்கஷ்டம். இரண்டு முறை கேட்டு விட்டு கடுப்புடன், கஷ்டப்பட்டு வெட்டுகிறான். இங்கே ஆன்-ன் கண்களே கதை சொல்லிவிடுகிறது. மரியோ, ஆன்-ஐ அன்று இரவில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைக்கிறான். இதெல்லாம் அவளுக்கு புதிதாக தெரிகிறது. பின் தொடரும் ப்ராட்லீ அவன் நண்பன் பாப்பரசி புகைப்படம் எடுப்பவன் வருவதற்கு தாமதம் ஆகவே, அங்கு விளையாடும் குழந்தைகளிடமிருந்து காமெரா பிடுங்க முயன்று அக்குழந்தைகளின் ஆசிரியர் முறைக்க தர்ம சங்கடம். பின் சாலையோரத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் கடையில் ஒரு கோன் ஐஸை வாங்கிச் சுவைத்துக் கொண்டு ஒரு பூக்கடைக்கு வருகிறாள். இங்கு ஒரு அழகான காட்சி. பூக்கடையில் இருப்பவன் அவள் கையில் ஒரு பூங்கொத்தை கொடுக்கிறான். அவள் பையில் பணம் தேடுகிறாள். பணம் குறைவாக இருப்பதைப் பார்த்து பூங்கொத்தை அவனிடமே திருப்பி கொடுக்கிறாள். அவன் பரிதாபப்பட்டு அந்த பூங்கொத்தில் இருந்து ஒரு ஒற்றை பூவை அவளிடம் கொடுக்கிறான். அவள் அதற்கு காசு கொடுக்க அவன் வாங்கிக் கொள்ள மறுக்கிறான். அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அந்தப் பூவுடன் ஓர் இடத்தில் வந்து அமர்கிறாள்.



அங்கு ஒன்றும் தெரியாததை போல "ஹேய்! என்ன இங்கே?!!" என்றவாறு அங்கு வந்து அவளுடன் சேருகிறான் ப்ராட்லீ. ப்ராட்லீயிடம் தான் பள்ளியில் இருந்து ஓடிவந்துவிட்டதாகவும், திரும்பும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறாள். ப்ராட்லீ இன்னும் இருக்கும் நேரத்தை தன்னுடன் செலவழிக்கும் படி கூறுகிறான். பின் ஒரு சாலையோர உணவகத்தில் அமர்கிறார்கள். (அவள் சாதாரணமாக ஷாம்பெய்ன் கேட்க, ஆடித்தான் போகிறான் ப்ராட்லீ). இந்த நேரத்தில் பாப்பரசி புகைப்படம் எடுக்கும் இர்விங் (Irving Radovich) வந்து சேறுகிறான். அவளிடம் ஏதோ உளர பிராட்லீ அவன் மேல் காபியை ஊற்றி தனியே அழைத்து விவரிக்கிறான். பின் அவள் (முதல் முறையாக) புகை பிடிப்பதை அவன் கையில் கையில் சிகரெட் லைட்டருடன் பொருத்தப்பட்ட காமெராவில் படம் பிடிக்க ஆரம்பிக்கிறான்.

இதற்கிடையில் இளவரசியை தேடி ரகசியமாக ஒரு குழு வந்து சேருகிறது. இளவரசியோ பிராட்லீயுடன் ஸ்கூட்டரில் ரோம் நகரத்தை வலம் வருகிறாள். பின்னால் காரில் வரும் இர்விங் புகைப்படம் எடுத்து தள்ளிக்கொண்டு வருகிறான். ஒரு முறை ஓட்டத் தெரியாமல் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கண்டபடி ஓட்ட பின் காவலர்கள் துரத்தி காவல் நிலையத்தில் விசாரணை. பிராட்லீ அமெரிக்க பத்திரிக்கையாளர் என்பதாலும், அப்பொழுதுதான் திருமணம் ஆனவர்கள் என்றும் பொய் கூறுவதாலும் விடுவிக்கப்படுக்கிறான். (அந்த பூ கொடுத்தவன் ரோம் முறைப்படி ஆன்-க்கு ஒரு கிஸ் வேறு. வயிறு எறிகிறது). பின், யார் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்க, பொய் சொன்னால் கையை தின்றும் ஒரு குகைக்குள் கையை விடுமாறு கூறுகிறான் பிராட்லீ. அவள் பயந்து பிராட்லீயை முதலில் கையை விட சொல்கிறாள். (காதலன் படம் நியாபகம் வருதா?). கையை உள்ளே விட்டதும் மாட்டிக்கொள்வது போல அலற அவள் பயந்து அவனை கட்டிக்கொள்கிறாள். கையை வெளியே எடுத்தால் அவன் கோட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறான். இவையெல்லாம் புகைப்படமாகிக் கொண்டிருப்பதை அறியாமல். பின் ஒரு சுவரருகே வரிகிறார்கள். அது வேண்டிக்கொண்டது நடந்தால் அதனை ஒரு சீட்டில் (tablet) எழுதி அந்த சுவற்றில் ஒட்டிவைப்பது வழக்கம். அதனை படிக்கவைத்து அதையும் புகைப்படம் எடுக்கிறார்கள். அவளும் அங்கே வேண்டிக்கொள்கிறாள். அன்று இரவு நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு போகலாம் என்கிறாள். இர்விங் அங்கே கழன்று கொண்டு இரவில் வந்து சேர்வதாக பிரிகிறான்.



அடுத்த காட்சி இரவு கேளிக்கை விருந்து. அங்கே இருக்கும் பாதுகப்பு படையினர் அவளை அடையாளம் கண்டு கொள்ள, தன் ரோமானிய விடுமுறை முடிவுக்கு வருவதாக உணர்கிறாள். அந்த பாதுகாப்பு வீரர் சென்று மற்றவர்களை கூட்டி செல்ல போகிறார். அங்கு மரியோ வந்து சேர்கிறான். மரியோவும் ஆன்-ம் சேர்ந்து ஆடுகிறார்கள். அந்த இடத்திலும் சிகை அலங்காரம் வேறு செய்கிறான். இதையும் அங்கு வந்து சேறும் இர்விங் படம் எடுக்கிறான். என்ன ஃபிளாஷ் என்று அவளுக்கு விளங்கவில்லை. பாதுகாப்பு படை வீரர் அவளிடம் நடனமாடும் தோரணையில் அவளிடம் வந்து "Your Highness"-ஐ வந்து காரில் ஏறும் படி மிரட்ட, அவள் திமிறுகிறாள். அங்கு ஒரே சண்டை, களேபரம். ஆன் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினரை கிடாரினால் அடிப்பதை படம் எடுக்கிறான் இர்விங். (முதல் தடவை அடிக்கும் பொழுது படம் எடுக்க தவற, மறுமுறை அடிக்குமாறு கூறி படம் எடுக்கிறான் இர்விங்). அங்கிருந்து ஒருவாறு பிராட்லீயும் ஆன்-ம் தப்பிக்கிறார்கள்.

வீட்டிற்கு வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு அவள் திரும்புவதாக கூறுகிறாள்.



காரில் தூதரகத்தின் வாசல் வரை வந்து வழியனுப்புகிறான் பிராட்லீ. "நான் உன்னை விட்டு இப்பொழுது பிரிய வேண்டும். நான் அந்த மூலையில் சென்று திரும்பியதும் காரை எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும். திரும்பி பார்க்க கூடாது" என்கிறாள். "உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை", "முயற்சிக்கவேண்டாம்" - இருவரும் காதல் கொண்டுள்ளதாக உணருகிறார்கள். பின் தூதரகத்திற்கு சோகத்துடன் திரும்புகிறாள்.

(இங்கிருந்து ஆன்-ன் நடிப்பில் அப்படியே தலைகீழ் மாற்றம்) அங்கு பின் சிறிய விசாரணை. "என் குடும்பத்திற்கும், நாட்டிற்கு நான் ஆற்ற வேண்டிய கடமையை நினைத்து பார்க்காவிடில் நான் திரும்பியிருக்க மாட்டேன்" என்று கூற இளவரசியின் பதிலைப் பார்த்து விக்கித்துப் போகின்றனர். அவளிடம் இருக்கும் மாற்றத்தை பார்த்து விக்கித்து போகிறாஅர்கள். முதல் முதலாக அறையில் தனிமையில் உறங்குகிறாள்.

பிராட்லீயை அவன் பாஸ் பார்க்க வருகிறான். பேட்டி என்ன ஆயிற்று என்று கேட்க, அவன் பேட்டி எதுவும் இல்லை என்று பொய் சொல்கிறான். பின் இர்விங் வந்து சேர, இங்கும் ஃபோட்டோ வந்துவிட்டதாக உளர முட்படுகிறான். பிராட்லீ சமாளிக்கிறான். இளாவரசியுடன் எந்த பேட்டியும் இல்லை என்கிறான். பாஸ் சென்றவுடன், இர்விங் வேறு திட்டம் உள்ளதா என்று கேட்கிறான். அவன் எந்த பேட்டி, கதையும் இல்லை என்கிறான். அந்த ஃபோட்டோக்களை ஆர்வமாக பார்க்கிறார்கள். ஒவ்வொரு ஃபோட்டோவிற்கும் பொருத்தமான தலைப்பு வேறு. ஆன்-க்காக எதையும் வெளியே சொல்லவேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

கிளைமேக்ஸ். இங்கே குறிப்பிடப்படவேண்டியது, ஆன், பிராட்லீ மற்றும் இர்விங் ஆனிய மூவரும் கண்களால் பேசிக்கொள்வது. இளவரசியுடன் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு (அதாவது தூர தரிசணம்). முதல் வரிசையில் பிராட்லீயும், இர்விங்கும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி + ஆச்சர்யம் அடைகிறாள், மிக மிக மெல்லிதான முக பாவனையுடன். அங்கே பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இரு பொருள்பட, அவர்கள் மூவருக்கும் மட்டும் புரியும்படி, பதிலளிக்கிறாள் ஆன். மக்களுடனான உறவில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ரோம் நகரை தான் மிகவும் விரும்புவதாவகவும், அவளால் இந்த நகரத்தை மறக்க முடியாது எனவும் கூறுகிறாள். வழக்கமாக யாரையும் புன்படுத்தும் படி தனக்கு இந்த நகரம் தான் பிடிக்கும் என சொல்லக்கூடாது. ஆனால், அவள் தனக்கு ரோம் நகரம் பிடித்ததாக கூறுகிறாள். அங்கே அந்த இருவர் + இர்விங் கண்களுக்குள் நடக்கும் பரிபாலணை அழகு.

பின் புகைப்படம் எடுக்கும் நேரம். ஒவ்வொருவராக புகைப்படம் எடுக்க, இர்விங் முன்னே வந்து தன் சிகரெட் லைட்டரால் புகைப்படம் எடுக்கிறான். ஆன்-க்கு விளங்குகிறது. முகத்தில் சிறிய அதிர்ச்சியுடன்.

வழக்கத்திற்கு மாறாக, பத்திரிக்கையளர்களை தனியே பார்க்க விரும்புகிறாள். ஒவ்வொரு பத்திரிக்கையாளராக பார்த்து அறிமுகம் செய்து கை குலுக்குகிறாள். இர்விங்குடன் கை குலுக்க, அவன் ஒரு பரிசு தருவதாக கூறி, அவன் எடுத்த புகைப்படங்களை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறான். அதில் ஓரிரு படங்களை பார்க்கிறாள். முதல் படம் பாதுகாப்பு படையினர் தலையில் அடிப்பது. "தேங்க்யூ ஸோ வெரி மச்". அடுத்து "பிராட்லீ. அமெரிக்கன் நியூஸ் சர்வீசஸ்"- கை கொடுக்கிறான். "ஸோ ஹாப்பி மிஸ்டர்.பிராட்லீ". பின் இளவரசியின் gesture-க்காக அனைவரும் ஒரு நிமிடம் கை தட்டுகிறார்கள்.



கடைசியாக அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்து, பிராட்லீயையும் தான், பெரிய புன்னைகையுடன், கண்களில் நீர் முட்ட, செல்கிறாள். அனைவரும் கலைகிறர்கள். கடைசி ஆளாக பிராட்லீ. அவள் சென்ற கதவை ஒரு முறை வெறித்து பார்க்கிறான். அவளை மறுபடியும் பார்க்க முடியாது அல்லவா? அவன் கால் தடங்களின் ஓசை மட்டுமே எதிரொலிக்க, மெல்லிய பின்னனி இசை வழிய, காமெரா தூதரகத்திலிருந்து பின்னோக்கி வர (அவன் காதலும் அவன் காலடியின் ஊடே வருகிறது), பிராட்லீ ஒருமுறை தூதரகத்தை திரும்பி பார்த்து வெளியே செல்கிறான். அழகிய எழுத்துருவில் "The End".

படம் பார்த்து தெரிந்துக் கொண்டது. நல்ல வேளை பெரிய மன்னர் பரம்பரையில் பிறக்கவில்லை என்று.

Gregory Peck - Joe Bradley
Audrey Hepburn - Princess Ann ('Anya Smith')
Eddie Albert - Irving Radovich
Paolo Carlini - Mario Delani, hairdresser

பிற்சேர்க்கை:

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் (5 திசம்பர் 2007) சிவாஜி, பத்மினி ஆரம்ப காலங்களில் நடித்த ராஜாராணி திரைப்படம் பார்த்தபோது தெரிந்தது, இந்தப்படத்தில் இருந்து சில காட்சிகளை அப்படியே சுட்டிருக்கிறார்கள். தூக்க மயக்கத்தில் இருக்கும் கதாநாயகியை கதாநாயகன் தன் வீட்டிற்கு அழைத்து செல்லும் பொழுது நடந்து கொள்ளும் விதம், தினசரி நாழிதள் மூலம் கதாநாயகி யார் என்பதை அறிந்துகொள்ளுதல் போன்றவை.




மேலே - Yousuf Karsh-ன் போர்ட்ரெய்ட்

Friday, September 29, 2006

கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)

இரண்டு வாரங்களுக்கு முன் நண்பனின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பு முடிந்து அடுத்த நாள், வழக்கம் போல், முகூர்த்தம் முடிந்து கல்யாண மண்டபம் சென்றோம் (முதல் நாள் இரவு தண்ணியெல்லாம் இல்லை). கையில் காமெரா இருந்தது. சில பல படங்களை எடுத்துவிட்டு பின் மணமக்களுடன் புகைப்படம் எடுக்கலாமென்று நின்றிருந்தோம். எங்களுக்கு முன் இருந்தவர்கள், அனேகமாக, மணப்பெண்ணின் தோழிகளாக இருக்க வேண்டும், நான்கு பேர். சரி! அடுத்து நாம் தான் என்று நினைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவரிடம் சென்று அங்கே ஃபோகஸ் லைட் பிடிப்பவரிடம், "போட்டோ எடுத்து தரீங்களா?" என்று மொட்டையாகக் கேட்டேன். காரணம், எங்களில் யாராவது ஒருவர் எடுத்தால் அவர் அந்தப் புகைப்படத்தில் இருக்கமாட்டார் ஆல்லவா? அவர் முதலில் எடுப்பதில்லை என்று சொன்னார். என்னடா இது! ஒரு போட்டோ எடுக்க இவ்வளவு பிகு பன்னுறாரே என்று நினைத்தேன். அவருடன் இருந்த ஃபோட்டோ எடுப்பவர், "பரவாயில்லை எடுத்துக் குடு" என்று எனக்காக ரெக்கமன்ட் செய்தார். சரி என்று அவரும் என் காமெராவை வாங்கிக் கொண்டார்.

வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார் என்று. ஒரு கணம் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. அடுத்து நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

பின் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். "இருக்கட்டும் பாவம்! இது கூட நல்லா தான் இருக்கு" என்று வைத்துக் கொண்டேன்.

பி.கு: தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினையின் காரணமாக "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் இந்த இடுகை தெரிவதில்லை. சிரமம் பார்க்காமல் வந்து தங்கள் பின்னூட்டங்களை பார்த்துக் கொள்ளுங்களேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Tuesday, September 19, 2006

அணுப்பிளவு (Nuclear Fission)

இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. 'மிகப் பெரியது' என்றால்? சொல்லத் தெரியவில்லை. ஆனால் 'மிகப் பெரியது'. இந்த பிரபஞ்சம் எதனால் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? இதன் ஆதி என்ன? அந்தம் என்ன? (இத்தன கேள்வி கேட்டா எந்த கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுறது?)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளை உடைத்துக் கொண்டேபோனாலும் கடைசியில் மிஞ்சிருப்பது அணுக்கள். நம்ம கதை இங்கே அணுக்கள் பற்றி இல்லை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவையே. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. இந்த உலகம் எப்பொழுது உருவானது? அப்படி ஒரு காலத்தில் உருவானது என்றால், உருவாவதற்கு முன் என்ன இருந்தது? வெற்றிடம்? அப்படியானால் அந்த வெற்றிடம் உருவாவதற்கு முன் என்ன இருந்தது?!!!
அணுக்கள் தாம் இந்த உலகின் மிகச் சிறிய பொருள். அப்போ அணுக்கள் உள்ளே இருப்பவை? கண்ணால் பார்க்க இயலாது. ஒரு குண்டூசி தலையில் 100 பில்லியன் பில்லியன் அணுக்களை உட்கார்த்தி வைக்க முடியும். ஒவ்வொரு அணுவும் மூன்று அடிப்படை பொருட்களால் உருவாக்கப்பட்டன.
1) இலத்திரன்கள் (எலெக்ட்ரான்கள்) - இவை -ve சார்ஜ் உள்ளவை.
2) புரோத்தன்கள் (ப்ரோட்டான்ஸ்) - இவை +ve சார்ஜ் உள்ளவை. இவை எலெக்ட்ரான்களை விட 1836 மடங்கு எடை கொண்டது.
3) நியூட்ரான்ஸ் - இவை எந்த சார்ஜும் இல்லாத, நடுநிலை மின்னேற்றம்.இவை எலெக்ட்ரான்களை விட 1839 மடங்கு எடை கொண்டது.
ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து நியூக்லியான்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது உட்கரு. ஒவ்வொரு அணுவின் உட்கருவை ப்ரோட்டான்களும், நியூட்ரான்களும் சேர்ந்து உருவாக்குகின்றன. அதாவது, உட்கரு என்பது ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள். இவ்விரண்டையும் சுற்றி, ஒரு சிமென்ட் கலவை அல்லது கோ(யி)ந்து போல, ஒரு கலவை (binding force) இருப்பதால் அவை உட்கருவை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. ஒரு அணுவை சுற்றிக் இருக்கும் எலெக்ட்ரான்களும் (-ve), உட்கருவில் இருக்கும் ப்ரோட்டான்களும் (+ve) ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கிறது.
ஒரு அணு
சில்வர்-ன் அணு எண்
உட்கருவின் ஒரு பகுதியாக இருக்கும் நியூட்ரான்ஸ் சும்மா 'தேமே' என்று தான் இருக்கும். ஆனால், அது தான் இங்கே மேட்டரே. ஆக, இது ஒரு அணுவின் கட்டமைப்பு. இதைப் போல 92+ விதமான அணுக்கள் இருப்பதாக கண்டுபிடித்து பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அவை அடிப்படைத் தனிமங்கள். அவற்றை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு எண் வைத்து குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் உட்கருவில் உள்ள ப்ரோட்டான்களின் (+ve) எண்ணிக்கை தான் அது. இதை தான் 'அணு எண்' - Atomic Number - என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் ஒரு உட்கருவில் உள்ள இலத்திரன்களின் எண்ணிக்கை இந்த அணு எண்ணுடன் ஒத்துப் போகும். உதா, ஹைட்ரஜன் - 1, லித்தியம் - 2, ஆக்ஸிஜன் - 8, தங்கம் - 79, யுரேணியம் - 92. இவற்றை இங்கு காணலாம். மற்றபடி இவற்றை பற்றி விலாவரியாக பேச இங்கு தேவை இல்லை (அதாவது, எனக்கும் அவ்வளவு தான் தெரியும்னு அர்த்தம், புரிஞ்சுக்கோங்க).
உதா,
லித்தியம் - மாதிரி
அடுத்து, ஒவ்வொரு அணு குடும்பத்திலும் இன்னபிற உருப்பினர்களும் உண்டு. அவற்றை isotopes என்று அழைப்பர். இந்த குடும்ப அங்கத்தினர்கள் யாவரும் ஒரே எண்ணிக்கை புரோத்தன்களை வைத்திருப்பர். ஆனால், அவர்களுக்குள் உள்ள வித்தியாசம் அதன் நியூட்ரான்களின் எண்ணிக்கையே.
உதா, யுரேணியம்-ன் புரோத்தன்களின் எண்ணிக்கை என்னவோ 92 தான். ஆனால், அவற்றின் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபடும். 142, 143, 146 என. புரோத்தன்கள் + நியூட்ரான்கள் = அணு எடை (Atomic Mass). அதனால், நம்மிடம் உள்ள யுரேணியத்தின் வகைகள் U234, U235, U238. இங்கு 234 என்பது 92 + 142.
இவற்றில் பல தனிமங்கள் தங்கள் நிலையிலேயே நிலையாக இருக்கும். ஆனால் 'சில' தனிமங்கள் எப்பொழுதும் ஏதாவது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் கதிரியக்கம் (radioactive) என்பர். உதாரணமாக, ரேடியம் (Ra88) தன்னில் இருந்து, தன் நியூட்ரான்கள் மற்றும் புரோத்தன்கள் உடன், சக்தி வாய்ந்த கதிர்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இரவில் கூட ஒளிருமே, கடைகளில் ஸ்டிக்கர்க்ளாக விற்ப்பார்கள். இது எந்த அளவு active-ஆக இருக்கும் என்றால், தன் சொந்த உட்கருவின் கட்டமைப்பையே மாற்றும் வரை active ஆக இருக்கும் ("சொந்த செலவுல சூன்யம் வைத்துக் கொள்வது"?). இப்படி தன் கட்டமைப்பே மாறும் பொழுது அது தன் குடும்பத்தையே மாற்றுகிறது. உதா, ரேடியம் (Ra88) தன்னுள் இருந்த சக்தியை எல்லாம் வெளியேற்றி வெளியேற்றி ரேடான் (Rn86) ஆக மாறி பின் காரீயம், Lead,(Pb82) ஆக மாறுகிறது. அது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ளும் வரை இப்படி நிலை மாறிக் கொண்டிருக்கும். இதற்குப் பெயர் இயற்கை உருமாற்றம் (Natural Transmutation), இது இயற்கையாக நடக்கும் பட்சத்தில். இப்படி ஒரு அணு தன் நிலையை தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் பொழுது, ஏன் மனிதன் தன்னால் ஒரு அணுவின் நிலையை மாற்ற முடியாது என்று சிந்தித்ததன் விளைவு தான் செயற்கையாக உருமாற்றம் செய்வது.
இதன் படி, ஒரு கதிரியக்க உட்கருவை, (உதா, யுரேனியும், ரேடியம்), மிண்காந்த சக்தியைக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஆல்ஃபா கதிர்களில் உள்ள உட்கருவில் 2 புரோத்தன்கள் மற்றும் 2 நியூட்ரான்கள் இருக்கும். 2 புரோத்தன்கள் + 2 நியூட்ரான்கள் = ஹீலியம் (He2). இந்த முறைக்கு Alpha decay என்று பெயர். இதுவும் ஒரு தனிமம் தான். இது வேகமாக நகரக் கூடியது, 1 வினாடியில் 2 கோடி மீட்டர்கள். இவை காற்றில் சில தூரங்கள் (இன்ச்-ல்) மட்டுமே பயணப்படும். அவற்றை சாதாரண காகிதங்களாலேயே தடுக்க முடியும். இந்த முறையில் 2 அணுக்கள் இழந்து அது வேறு ஒரு பொருளாக மாற்றம் பெருகிறது. உதா, யுரேணியம் (U92) 2 அணுக்களை இழந்து தோரியமாக (Th92) மாறுகிறது. சுருக்கமாக சொன்னால், நீங்கள் கடையில் வாங்கும் ரேடியமானது வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வெளிச்சம் தான் ஹீலியம் (He2). ஹீலியம் காலியாகிக்கொண்டே இருப்பதால் காலப்போக்கில், அந்த ரேடியம் (Ra88) ரேடான்-ஆக (Rn86) மாறுகிறது. ஆல்ஃபா கதிர்கள் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Nuclear Radiation.
இப்படி ஆல்ஃபா கதிர்களை ஒரு, உதா, நைட்ரஜன் மீது பாய்ச்சும் பொழுது, ஆல்ஃபா கதிர்களில் உள்ள ஒரு புரோத்தன், நைட்ரஜன் உட்கருவால் ஈர்க்கப்பட்டு அது ஆக்சிஜனாக மாறியது. இதற்குப் பெயர் செயற்கை உருமாற்றம் (Artificial Transmutation). மனிதன் ஒரு அணுவையே மாற்றுகிறான். இந்த ஆராய்ச்சிகள் அதன் பின் வந்த விஞ்ஞானிகளால் வலுப்பெற்றது.
ஆல்ஃபா கதிர்கள்

ஆல்ஃபா ஊடுருவல்
பின் 1939-ல் சில விஞ்ஞானிகளின் யுரேணியம் உருமாற்ற சோதனையின் பொழுது ஒரு நியூட்ரானை யுரேணியத்தின் உட்கருவின் மீது பாய்ச்சினார்கள். கவனிக்க, யுரேணியம் அதிக எடை கொண்டது. அப்பொழுது கிடைத்த விளைவு? அணுப்பிளவு (Nuclear Fission). ஒரு சிறு மாற்றத்திற்கு பதில், அணுக்களே இரண்டாக உடைந்தது. இது உலகை மற்றத்தக்க (அல்லது உலகின் வரைபடத்தை மாற்றத்தக்க) கண்டுபிடிப்பு. என்ன நடந்தது? அங்கே நடந்தது விஞ்ஞானத்தின் இரட்டிப்பு அதிசயம். விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்காத அதிசயம்.
ஒன்று யுரேணியத்தின் உட்கருவை (கவனிக்க ப்ரோட்டான்கள் + நியூட்ரான்கள் கொண்டது) சேர்க்க வைத்திருக்கும் கோந்து (binding force) என்னும் கலவை பற்றியது. யுரேணியம் யுரேணியமாக இருந்த பொழுது இருந்த கலவையின் எடை, அவை இரண்டாக பிரிந்த அணுக்களில் இருந்த கலவையின் மொத்த எடையை விட அதிகமாக இருந்தது (அல்லது அதுவே தேவையானதாக இருந்தது). பிரிந்த பின் அந்த கலவையில் ஒரு பகுதி மட்டும் தனியே வந்து...வெடித்தது. ஏன் bold-ல் வெடித்தது? அது பெரும் சக்தியாக வெடித்தது. வெடித்து ஐண்ஸ்டீனின் E = MC2 என்னும் ஃபார்முலா படி எடையும் சக்தியும் ஒன்று என்று நிரூபித்தது. கீழே உள்ள படத்தினைப் பார்க்கவும்.
பிளக்கப்பட்ட அணு

நெட்டில் சுட்டது:
அணுப்பிளவைப் (Nuclear Fission) பற்றி பலருக்கும் தெரியும். ஹிரோஷிமா, நகசாகி நகரங்களின் பேரழிவிற்கும் அணுமின் நிலையங்களில் ஆக்கபூர்வ சக்தி உற்பத்திக்கும் அணுப்பிளவுதான் அடிப்படை. மாபெரும் அணுவின் பொருண்மைக்கும் (m0) அதைப் பிளக்கும்பொழுது உருவாகும் சிறு அணுக்களின் கூடுதல் பொருண்மைக்கும் (m1 + m2) இடையே உள்ள சக்தியின் வேறுபாட்டுக்கு நேர்விகிததில் சக்தி தோன்றுகிறது. இதையே ஐன்ஸ்டைனின் E = mc2 என்ற சமன்பாடு கணக்கிடுகிறது. அணுப்பிளவில் சக்தியுடன் கூட பக்கவிளைவாகக் கதிரியக்கம், வெப்பக்கதிர்வீச்சு போன்றவையும் நிகழ்கின்றன. இவற்றினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவு அதிகம்.

இரண்டாவது? யுரேணியம் உட்கரு பிரியும் பொழுது சக்தியானது வெப்பமாகவும், வெடியாகவும் வெளிப்பட்டது. அப்பொழுது சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்படுகின்றன. அவை எக்ஸ்-ரேக்களை ஒத்திருந்தன. அப்பொழுது அதி வேகத்தில் சில நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன. அங்கே இன்னும் சில பல U235 இருப்பதால், அந்த நியூட்ரான்கள் மற்ற U235 அணுக்களை முன்பு சொன்ன அதே ஒன்றாவது அதிசயப்படி யுரேணியத்தைப் பிரித்து பிரித்து பிரித்து பிரித்து பிரித்து அவற்றை வெடிக்க வைக்கிறது.
விளைவு அல்ல!!! ஒரு தொடர் விளைவு (Chain Reaction), நம்ம பாலபாரதி அடுத்தடுத்து 'தம்' போடுவது போல, இரண்டே இரண்டு வினாடிகளில் மில்லியன் பில்லியன் பில்லியன் அணுக்கள் வெடிக்கின்றன. அதன் சக்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு பெரிய மைதானம் நிறைய டைனமைட்டை வெடிக்க வைத்தால் கிடைக்கக் கூடிய சக்தி, இந்த ஒரு சிறிய பந்து அளவிலான யுரேணியத்தை பிளப்பதால் உண்டாகும். எந்த ஒரு அதிசய கண்டுபிடிப்பும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுவதை விட, தற்காப்புக்கு பயன்படுத்தப் போய், பின் சமயம் கிடைக்கும் பொழுது அந்த நாட்டை அழிக்க பயன்படுத்திவிட்டு, அதன் பின் பிராயசித்தத்துக்காக அழிக்கப்பட்ட தேசத்தின் ராணுவ தேவைகளை கவனித்துக் கொள்வது. பாதிக்கப்பட்ட நாடும் சமாதானம் பேசிக் கொண்டு உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை தயார் செய்வது (கேட்டால் அது business).
சரி! அணு ஆயுதம் செய்ய ஒரு பந்து அளவிலான யுரேணியத்திற்கு என்ன செய்வது? மண்ணில் அதிகமாக கிடைக்கக் கூடிய யுரேணியத்தின் isotopes-களில் ஒன்றான U238-ஐ மலையளவு பிளவித்து செய்து U235-ஆக மாற்றி முதல் அணுகுண்டை செய்தார்கள். இதற்கு ஏராளமான மனித உழைப்பு தேவைப்பட்டது (அடுத்தவனை அழிக்கத்தான் ஓவர் டைமில் ஒர்க் பன்னுவோமே!!!). இங்கே கவனிக்க வேண்டியது, U235 மட்டுமே சங்கிலித் தொடரை அனுமதிக்கும், U238 அல்ல. ஆனால், புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும்.
ஆக, அணுகுண்டு எப்படி வெடிக்கிறது என்று (மேலோட்டமாக) பார்த்தோம்.
(சுற்றிலும் சீல் செய்யப்பட்ட) ரியாக்ட்டர்களின் உதவியுடன், செயற்கையான(க) புளூட்டோனியம் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ரியாக்ட்டர்களில் இயற்கையான யுரேணியங்கள் (U235 மற்றும் U238) கம்பி வடிவில் வைக்கப்படுகின்றது. அந்த ரியாக்ட்டர்களில் உள்ள கிராஃப்பைட், U235 பிளக்கப்படும் பொழுது அதி வேகத்தில் வெளியாகும் சில நியூட்ரான்களின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அவற்றில் சில (கட்டுப்படுத்தப்படாத) நியூட்ரான்கள் மற்ற U235-க்களை பிளக்கும். அதனால், இது அந்த சங்கிலித் தொடரை கட்டுக்குள் வைத்திருந்து தொடர முடிகிறது. கட்டுப்படுத்தப்பட்ட நியூட்ரான்கள் U238-ஐ பிளக்க ஆரம்பிக்கிறது. U238 சங்கிலித் தொடரை அனுமதிப்பதில்லை. ஆனால் U235-ல் இருந்து வரும் ஒரு நியூட்ராணை எடுத்துக் கொண்டு U238-ஆனது முதலின் நெப்ட்யூனியம்-ஆக (Np93) மாறி, பின் அது புளூட்டோனியமாக (Pu94) மாறுகிறது. புளூட்டோனியம் (Pu94) சங்கிலித் தொடரை அனுமதிக்கும். அதனால், புளூட்டோனியம் உபயோகித்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. இங்கே, ரியாக்ட்டரே ஒரு அணுவிசை மையமாக இருக்க முடிகிறது. புளூட்டோனியம் கிடைப்பதுடன், அதன் விளைவாக மிக பயங்கரமான அளவில் வெப்பமும் வெளிப்படுவது நியூட்டனின் மூன்றாவது விதி. அந்த வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அதை உபயோகிக்க முடிவதால் பல வழிகளில் உபயோகமாகிறது. அதன் ஒரு முக்கியமான உபயோகம் மின்சாரம்.
அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்
கால இயந்திரம்
E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

Monday, September 11, 2006

வீடு

இன்று அதிகலை (செப் 07, 2006, சுமார் 2:30 மணியளவில்) House drop-ல் வீட்டிற்கு வரும் வழியில், என் காருக்கு முன் ஒரு 'சின்ன யானை' (அதாங்க, ஆட்டோவிற்கும் டெம்போவிற்குமான hybrid), சில பல சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பின்னால் ஒரு மிதி வண்டி கட்டப்பட்டிருந்தது. அந்த வண்டிக்குள் வீட்டு உபயோக பொருட்கள் அடுக்கி, துருத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சின்ன யானையின் பதிவு எண் பாண்டியில். யாரோ பாண்டிசேரியில் வீட்டை காலி செய்து, 'சிங்கார' சென்னைக்கு குடி வந்துகொண்டிருந்தார்கள். வீட்டை காலி செய்து வருவது என்பது சில வேளைகளில் மகிழ்ச்சியையும், சில வேளைகளில் துக்கத்தையும் கொண்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவர்கள் மகிழ்ச்சியான மனநிலையிலேயே செல்லட்டும்.

பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினைக் கொண்டுள்ள நம் நாட்டில், சொந்த வீடு என்பது பலரின் கனவாகும். எப்படியாவது சம்பாதித்து பணம் சேர்த்து செந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று உழைத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பர் பலர். வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. மற்ற நாடுகளைப் போல அல்லாமல், வீடு என்பதும் நம் வீட்டு அங்கத்தினர்களில் ஒன்று. காரணம், நாம் sentiment வாசிகள். நம் மகிழ்ச்சியை, துக்கங்களை எல்லாம் நாம் அந்த வீட்டின் சுவற்றினூடே பகிர்ந்து கொண்டிருப்போம். நம்மைப் பொருத்த வரை நம் மகிழ்ச்சியையும் துக்கங்களையும் உயிருடன் பதிவு செய்யும் ஒரு உயிருள்ள சீவனே வீடு. வீடு என்பது செங்கற்களால் சுற்றி எழுப்பப்பட்ட சுவர் மட்டுமே அல்ல. அது கட்டுபவரின் உழைப்பும், வியர்வையும், ரத்தமும் சம்பந்தப்பட்டது.

வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிந்தவர்களும், அல்லது வேறு வழியில்லாமல் பெரும் துக்கத்துடன் வீட்டை விட்டு உயிரற்ற நடை பிணமாக வந்தவர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள். துரதிர்ஷ்டமாக என் வீட்டில் இரண்டையும் பார்த்திருக்கிறேன்.

கோடை விடுமுறை முடிந்து சேலத்தில் இருக்கும் பாட்டி வீட்டை விட்டு, வாழும் திருப்பத்தூருக்கு திரும்பும் நாள். அப்பொழுது பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு. அதிகாலையில் நான்கு மணி சுமாருக்கு, என் பாட்டி வீட்டில் என் அம்மாவும், அக்காவும் திடீரென்று காட்டு கத்தல் கத்தினார்கள். பயந்து கொண்டு அலறி அடைத்துக் கொண்டு எழுந்திருந்தேன். என் பாட்டி மேலே மாடியில் தனக்குத் தானே தீ வைத்து எரிந்துக் கொண்டிருந்தாள். கீழே இருந்து தீ வைத்துக் கொண்டால் எங்கே நாங்களும் பாதிக்கப்படுவோம் என்று மாடிக்கு சென்றிருக்க வேண்டும். என் தாத்தாவின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு(!) கழுத்து சங்கிலியையும், காது கம்மலையும் கழற்றி சமையலறையில் வைத்திருந்தாள். இவர் என் அம்மாவை வளர்த்தவர். சில வருடங்களுக்கு முன் தான், என் அம்மாவைப் பெற்ற பாட்டியும் இதே போல தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டாள். என் தாத்தா தண்ணீர் கொண்டு சென்று தீயை அனைத்தார். எனக்கோ கை கால் எல்லாம் வெடவெடத்துப் போய்விட்டது. நானும் என் அம்மாவும் எங்கள் பெரியம்மா வீட்டிற்கு போனோம். பின் என் பாட்டி ஓரிரு நிமிடத்தில் இறந்து போனாள், தன் கணவரிடமும், என் மாமி ஒருவரிடமும் தன் வாக்குமூலத்தை கூறியவாறு. என் பாட்டியை வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் வரை நான் அந்த வீட்டிற்கே செல்லவில்லை. இத்தனைக்கும் நான் தான் என் பாட்டிக்கு கொள்ளி வைக்க வேண்டும். பின் காரியம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கினேன். பின் நான் ஊருக்கு வந்துவிட்டேன்.

பின் நடந்தது, என் தாத்தாவும் அந்த வீட்டையும் விற்று தன் மகள் வீட்டிற்கே (திருப்பத்தூருக்கு) வர முடிவெடுத்தார். கடன் பிரச்சினையால் முன்பே ஓரிரு முறை வீட்டை விலை பேசியிருந்தார் என் தாத்தா. ஆனால், வீட்டை விட்டு வர முடியாது என்று என் பாட்டியும் ஓரிரு முறை தற்கொலைக்கு முயன்று, பின் அது முடியாமல் போனது. கடைசி தடவை மட்டும் அவள் வென்றாள்(!). ஆனால், மனதில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதவர். எவ்வளவு கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நான் கேட்ட பாட்மின்ட்டன் மட்டையை, எனக்கு பணம் கடன் வாங்கி வாங்கித் தந்தவர் (எனக்குத் தெரியாமல்). அந்த வயதில் எனக்கு இதெல்லாம் தெரியாது.

வீட்டை காலி செய்யும் நாளில் நடந்ததை பின் ஒரு நாள் என் அம்மா எனக்கு கூறினாள். என் பாட்டி வீடு இருந்த சந்தில் மூன்றாவது வீடு எங்களுடையது. முதல் இரண்டு வீடு என் தாத்தாவின் சகோதரர்களின் வீடு. அதாவது என் மாமா வீடு. அன்று, லாரியில் வீட்டு சாமான்கள் ஏற்றி புறப்படும் முன் எல்லோரும் என் மாமா வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் தாத்தாவை காணவில்லை. என் பாட்டி வீடானது நீளமாக இருக்கும். வாசல் படியில் இருந்து கடைசிவரை ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடைசியில் ஒரு நிலக்கண்ணாடி இருக்கும். வெளியில் இருந்து என் அம்மா பார்த்தால், அங்கே கடைசியில் இருக்கும் நிலக்கண்ணாடி அருகே நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தார் அந்த எழுபது வயது பெரியவர். வீட்டை விட்டு வர மனமில்லை அவருக்கு.

ஒரு நாளில் (ஆ.வி.யில்) படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

வாழ்ந்து கெட்டவரின்
வீட்டை
விலை பேசி
முடிக்கும் பொழுது
கேட்கலாம்
கொல்லை புரத்தில்
ஒரு
விசும்பலை...

எவ்வளவு நிதர்சனமான உண்மை இது? அன்று என் தாத்தாவின் மனநிலையும் அதுதான்.

பின் நான் அங்கிருக்கும் என் மாமா வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் என் வீட்டையும் (ஓரக்கண்ணால்) எட்டிப் பார்ப்பேன். ஒரு முறை அந்த வீட்டிலிருப்போர் எங்களை அடையாளம் கண்டு கொண்டு வீட்டின் உள்ளே வந்து பார்க்குமாறு அழைத்தார். ஏனோ, ஒரு வித பயத்தில், நான் உள்ளே போகவில்லை. என் அம்மாவும் அக்காவும் போய் பார்த்தார்கள். இப்பொழுது கூட அந்த வீட்டில் நாங்கள் இருந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருப்பேன். பாட்டி வீடு என்பதால் பெரும்பாலும் நாங்கள் கோடை விடுமுறையில் தான் செல்வோம். என் தாய் கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். அவர்களின் பிள்ளைகளும் வருவார்கள். திருவிழா கூட்டம் போல ஒரே ஆனந்தமாக இருக்கும் (பின்னே 20+ பேரப் பிள்ளைகள் ஆயிற்றே). எங்க தலைமுறை விளையாடிக்கொண்டிருக்கும். என் முந்தைய தலைமுறையும் (என் அம்மாவும் அவர்கள் அக்கா தங்கைகளும், மற்றும் அவர்கள் வயதுக்கும் சற்றே குறைவான என் பெரியம்மாவின் மகள்களும்) கூட்டமாக சுற்றி உட்க்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்கள் அந்த கோடை விடுமுறையில் எழுதும் ஸ்கோர்கள் மட்டும் ஒரு 192 பக்க புத்தகத்தையே காலி செய்துவிடும். மாலை வேளையில் எங்கள் வீட்டு வாசற்படியில், ஒவ்வொரு படியிலும் மூன்று பேர் வீதம் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ஆக, நான் மகிழ்ச்சியை மட்டுமே பார்த்த வீடு அது. அடிக்கடி (மிக சமீபத்தில் கூட) கனவில் அந்த வீடும், அந்த வாழ்க்கையும் வந்து வந்து போகும். அன்றெல்லாம் மனம் ஒருவாறு கனத்துப் போகும்.

அதே போல, என் தகப்பானாரின் தாயும், வீட்டை விட்டு வர மனமில்லாமல், அவள் வாழ்ந்த இடிந்த விட்டிலேயே கடைசி வரை வாழ்ந்து மடிந்தாள். அங்கள் ஊரில் குளிர் காலம் பயங்கரமாக இருக்கும். வரட்டுப் பனியாக இருக்கும். அந்தக் குளிரிலும் அந்த வீட்டிலேயே இருப்பாள்.

நானும் கூட நினைத்திருக்கிறேன், அப்படி என்ன ஒரு வீட்டை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பது என்று. நிழலின் அருமை வெய்யிலில் வந்தால் தான் தெரியும். இங்கே பிழைப்பிற்காக நான் சென்னை வந்தாலும், மாதம் ஒருமுறை ஊர் சென்றால் என் வீட்டின் இருக்கும் ஒரு அறையில் படுத்தால், நிச்சயம் சுகமான தூக்கம் வரும். அந்த அறை நான் சிறிய வயதிலிருந்து புழங்கிய அறை. அந்த அறையின் கட்டிலும், அந்தக் கட்டில் சுவறும், அங்கே படுத்தால் 'மட்டுமே' எனக்கு விவரிக்க முடியாத ஒரு கனவு வரும். ஒரு சிறு தெர்மாக்கோலின் ஒரு சிறு கண்ணின் மணியின் அளவு உருளை மட்டும் வளர்ந்து மிக பிரம்மாண்டமான உருவமாக உருவெடுத்து அலையும். அந்தக் கனவை நானும் அந்த சுவரும் மட்டுமே அறிவோம். இப்பொழுதும் நான் அந்த அறையில் படுத்தாலும் அந்தக் கனவு மட்டும் ஏனோ வருவதில்லை.

காலம் முன்னோக்கி மட்டுமே செல்வதல், ஒரு கால இயந்திரம் வேண்டும், அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல. சரி! வேலைப் பார்த்த அயர்ச்சி மற்றும் விடியற்காலை 4 மணி என்னை தூங்கச் சொல்கிறது. நான் தூங்கப் போறேன்.

Thursday, August 24, 2006

The Green Mile (1999)

The Bicycle Thief (1948) திரைப்படம் விமரிசனம் எழுதும் பொழுதே, இனி விமரிசனம் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன், The Green Mile பார்க்கும் வரை. 'The Green Mile' என்பது மரண தண்டனை அளிக்கப்பட்ட கைதிகள் கடைசியாக தண்டனை நிறைவேற்றப்பட அழைத்துச் செல்லப்படும் பாதை. அது 'The Last Mile', ஆனால் அதன் தரை பசுமையாக, பச்சையாக, இருப்பதானால் 'The Green Mile' என்று அழைக்கப்படுகிறது. கதை, பால் எட்ஜ்கோம்ப் (Paul Edgecomb) என்ற 108 வயது பெரியவர், தன் 44வது வயதில், 1935-ல், நடப்பதாக தன் தோழியிடம் சொல்கிறார். அவர் ஒரு முதியவர் இல்லத்தில் வாழ்கிறார். தினமும் வாக்கிங் மட்டும் தவறாமல் செல்கிறார். அதன் காரணம் தான் இந்த flaskback. (தேவைப்பட்டதால், இந்தக் கதைச் சுருக்கம் சற்றே பெரியதாக இருக்கும்). படம் extraordinary எல்லாம் இல்லை தான். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையின் அமைப்பும், மரணத்தின் வலி, மரணத்தின் பயம், மரணத்தின் கொடூரம் ஆகியவையும் அதே நேரத்துல் அதிக வருடம் உயிர் வாழ்வதன் கொடுமையையும் சொல்லியிருக்கிறது. படத்தின் கதாநாயகன் அமைதியாக, அடுத்த இரைக்காக காத்திருக்கும் ஒரு மின்சார நாற்காலி.

1935, கோடை காலத்தில், லூசியானா மாகானத்தில் ஒரு சிறைச்சாலையில் பால் பாதுகாவலராக பணிபுரிகிறார். பால், இறக்கப்போகும் கைதிகளை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் பட வேண்டும் என்றும் விரும்புகிறவர். அவர் ஒரு urinary infected நோயாளி. அவருடன் பணிபுரிபவர்கள் புரூட்டஸ் (Brutus Howell), பெர்சி (Percy Wetmore), டீன் (Dean Stanton) மற்றும் வார்டன் ஹால் (Warden Hal Moores). பெர்சி மூர்க்கமான, சாடிஸ்ட் பாதுகாவலன். அங்கிருக்கும் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகள் ஆர்லன் (Arlen Bitterbuck), டெல் (Eduard Delacroix).

Flashback ஆரம்பிக்கும் பொழுது, சிறைக்கு புதிய கைதி அழைத்து வரப்படுகின்றான். அவன் ஏழு அடி உயர, ஜான் காஃபி (John Coffey). இரண்டு சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு, execution-க்காக கொண்டுவரப்பட்டிருக்கிறான். "I couldn't help it, boss. I tried to take it back, but it was too late."-என்பது அவன் கைது செய்யப்படும் பொழுது அவன் கூறுகிற வாசகம். அவன் case history-யை படித்து அவனைப் பற்றி அறிந்துக் கொள்கிறான் பால். இரவில் விளக்கனைத்தால் பயமாக இருப்பதாக காஃபி பாலிடம் கூற, அவன் வேண்டுகோளின் படி விளக்கு இரவிலும் எரிய அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஆர்லனனின் தண்டனை நிறைவேற்ற ஒத்திகை பார்க்கப்படுகிறது. பின், ஆர்லனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எப்படி நிறைவேற்றப்படுகிறது என்று சொல்ல வேண்டும்.

ஆர்லன், தலையில் உச்சி நடுவில் மழிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படும் மின்சார நாற்காலி இருக்கும் அறைக்கு அழைத்து வரப்படுகின்றான். அந்தப் பாதை தான் 'THE LAST MILE', இங்கே 'THE GREEN MILE'. அவனுடைய தண்டனை நிறைவேற்றப்படிவதை பார்க்க (அல்லது சாட்சிகள்?) ஒரு கூட்டம் அமர்ந்திருக்கிறது. அங்கே ஒரு மெல்லிய நிசப்தம். கை கால்கள் நாற்காலியுடன் கட்டப்படுகிறது. சற்றே அதிகமாக மூச்சு ஆர்லனிடமிருந்து வெளிப்படுகிறது. அது மரண பயத்தின் வெளிப்பாடு. வாயில் துணி கொடுக்கப்படுகிறது. மழிக்கப்பட்ட தலையின் மேல், உப்பு நீரில் நணைக்கப்பட்ட பஞ்சு வைக்கப்பட்டு, அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு வைக்கப்படுகிறது. உப்பு நீரில் நணைக்கப்பட்ட பஞ்சு எதற்கு என்றால், அதன் காரணமாக மின்சாரம் மூளையில் அதி வேகமாக இறங்கி, மரணம் மிக விரைவில் நேரும் என்பதால். இல்லையென்றால்...அதை பிறகு பார்ப்போம். முகம் கருப்பு துணியால் மறைக்கப்படுகிறது. சரியாக பத்து மணிக்கு, "Roll on Two" என்று சொல்ல, ஒரு சுவிட்சை இயக்கப்பட (ஒரு வித மரண ஒலியுடன்), மின்சாரம் பாய்கிறது. சில வினாடிகளில், ஆர்லன் உடல் துடித்து, உடலிலெங்குமிருந்து புகை கிளம்பி தலை சாய்கிறது. மருத்துவர் பார்த்து ஆர்லன் இறக்க வில்லை என்று தலையாட்ட, மீண்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படிகிறது. இந்த தண்டனையின் ஊடே பெர்சிக்கு ஒரு டெமோவாகவும் அமைகிறது.

ஒரு நாள், சிறைக்கு புதிய கைதியாக வார்ட்டன் ('Wild Bill' Wharton) என்னும் doped, சைகோ அழைத்து வரப்படுகின்றான். அவன் உள்ளே வரும்பொழுது "Boss! carefull" என்று காஃபி பாலிடம் எச்சரிக்கின்றான். வார்ட்டன் உள்ளே வந்தவுடன் திடீரென்று அனைவரையுன் தாக்கி தப்பிக்க முயற்சிக்கிறான். பின், அவன் doped போல நடித்தான் என்று தெரிகிறது. பிற நேரங்களில் வார்ட்டன் வாயில் பிஸ்கட்டை மென்று புரூட்டஸ் முகத்தில் துப்புகிறான். மற்றொரு முறை, ஹாரி மீது சிறுநீர் கழிக்கிறான். அதற்காக ஒரு இருட்டரையில் வைத்து தண்டிக்கப்படுகிறான்.

ஒரு முறை பால் சிறுநீர் கழிக்க அவதிப்படுவதைப் பார்த்து காஃபி அவனை அருகில் அழைக்கிறான். சற்றே சினேக உணர்வுள்ள பாலும் அவன் அருகில் வருகிறான். திடீரென்று, காஃபி பாலின் உயிர்நிலையை கையில் பிடிக்கிறான். பால் திமிர முயர்சிக்கிறான். காஃபி அவனுக்கு ஏதோ சிகிச்சை அளிக்கிறான் என்று புரிந்து கொள்கிறான். "Awful tired now, boss. Dog tired" என்று காஃபி உடல் தளர்ந்து படுக்கிறான். அதன் பின் பாலின் சிருநீரக பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. காஃபியிடம் ஏதோ அற்புதம் இருப்பதாக உணர்கிறான்.

அந்த சிறையில் உள்ள ஒரு எலி, ஜிங்கிள்ஸ் (Mr. Jingles) நாளாடைவில் சிறையில் இருக்கும் மற்றொரு கைதியான டெல்-லிடம் சினேகமாகிறது. அது சிறிய சிறிய வித்தை காட்டுகிறது. டெல் ஆசையுடன் வளர்ப்பதால், அது அனைவரின் நண்பனாகிறது. மேலும் தன் மரணத்திற்கு பிறகு, ஜிங்கில்ஸை ஃப்லோரிடாவில் இருக்கும் "Mouseville"-ல் விடவேண்டும் என்று தன் ஆழையை சொல்லுகிறான். பால்-ம் அதற்கு சம்மதிக்கிறார். பெர்சி டெல்-ஐ வெறுக்கிறான். பின் ஒரு முறை வார்ட்டன் பெர்சி-யை திடீரென்று தாக்க, பெர்சி தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறான். அது தான் சமயம் என்று டெல்-லும் தன் கை எழும்பை உடைத்த பெர்சியை பார்த்து சிரித்து கேலி பேசுகிறான். இதையெல்லாம் மனதில் வைத்து டெல்-லின் அறையில் இருந்து வெளியில் வரும் சமயம் அதை காலால் மிதித்து கொன்றுவிடுகிறான் பெர்சி. டெல் உடடைந்து அழுகிறான். அதற்கு காஃபி தன் கையால் தொட்டு ஜிங்கிள்ஸ்-க்கிற்கு உயிர் கொடுக்கிறான். பின் டெல்-லிற்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வருகிறது. ஒரு நல்ல நாளில் ஒத்திகைப் பார்த்து டெல்-ஐயும் The Green Mile-ல் கொண்டு செல்கிறார்கள்.

இந்த முறை தண்டனையை நிறைவேற்றும் பொருப்பு, பால்-ன் மேற்பார்வையில், பெர்சியிடம் கொடுக்கப்படுகிறது. ஆர்லனைப் போலவே டெல்லிற்கும் உச்சியில் மழிக்கப்பட்டு நாற்காலியில் அமர வைத்து கட்டிப் போடுகிறார்கள். தலையில் கருப்புத் துணியை மாட்டும் முன் டெல் தன் ஜிங்கில்ஸை "Mouseville"-ல் விடவேண்டும் என்று சொல்ல, பெர்சி அப்படி ஒரு இடம் இல்லை என்றும் அது டெல்-ஐ சமாதானப்படுத்த பால் பொய் சொன்னார் என்றும் (தன் சாடிச முகம் காட்டி) சொல்ல, டெல் நொந்து போகிறான். முகத்தில் துணி மாட்டப்படுகின்றது. இப்பொழுது பெர்சி, அனைவரும் பார்க்காத நேரம், மழிக்கப்பட்ட தலையின் மேல் பஞ்சை உப்பு நீரில் நணைக்காமல் வைத்து அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு வைத்து பொருத்துகிறான். இதை அருகில் இருந்த பால் உணரவில்லை. நேரம் சரியாக பத்து ஆக, பெர்சி "Roll on Two" சொல்லி முடிக்க, பால் பக்கெட்டில் இருந்த உப்புத் தண்ணீர் சலனமற்று கிடைப்பதையும், அது கீழே சற்றும் சிந்தாமல் இருப்பதையும் பார்த்து, சுவிட்சை போட வேண்டாம் என்று சொல்ல வாய் திறப்பதற்கு முன், நேரம் கடந்து விடுகிறது. சுவிட்சை போட, மின்சாரம் டெல்-ன் உடலில் பாய்கிறது. இந்த முறை மரணம் மிகக் கொடியதாக இருக்கிறது. டெல் மரண அவஸ்தையில் துடிக்கிறான். மின்சாரம் அவனை கொல்லவில்லை, அல்லது மிக மிக மெதுவாக கொல்கிறது. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு ய்கமாக இருக்கிறது (படம் பார்த்த எனக்கும் தான்). ஆனால், இடையில் அதனை நிறுத்தவும் முடியாது. மின்சாரம் டெல்-ன் உடலில் பாயப் பாய, அவன் உடல் தீய்ந்து போக தொடங்குகிறது. சிறையில் உள்ள விளக்குகள் வெடிக்கிறது. அங்கே தன் அறையில் காஃபி-யால் டெல்-ன் வலியை உணரமுடிகிறது. ஜிங்கில்ஸ்-ஐ கையில் வைத்திருந்து அதற்கு தன் ஆயுளில் சில பாகங்களை கொடுக்கின்றான். மற்றொரு அறையில் வார்ட்டன் டெல் துடிப்பதை உணர்ந்து 'சந்தோஷத்தில்' பாடுகிறான்,
"Barbecue, me and you! Stinky pinky, pew, pew! Or dilly, Jilly, Hilly or Bob! It was a french-fried Cajun named Delacroix!".
அங்கே டெல்-ன் உடல் இறக்காமல் தீய்ந்து போக ஆரம்பித்து, அவன் உடல் வெடிக்க ஆரம்பிக்கிறது. அவன் உடலிருந்து கரும் புகையும், நாற்றமும் வெளிப்பட சுற்றி அமர்ந்து 'வேடிக்கை' பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கதவை நோக்கி பயத்தில் ஓட ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கொடுமை சில நிமிடங்கள் நீடிக்கிறது. பின் உருக்குலைந்த நிலையில் டெல்-ன் உடல் ஒரு வழியாக ஓய்ந்து சாய்கிறது. அவன் உயிர் பிரியும் நேரம், காஃபியின் கையில் இருந்த ஜிங்கில்ஸ் குதித்து ஒரு அறையில் நுழைந்து காணாமல் போகிறது. பெர்சிக்கு சரியான பாடம் கற்பிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவன் பணி மாற்றல் வாங்கி சொல்ல வேண்டும் என்று மிரட்டப்படுகின்றான். (இந்த மேற்கூறிய தண்டனை காட்சி காண மிகுந்த தைரியம் வேண்டும். இதைப் பார்த்து இரண்டு நாட்கள் எனக்கு பயத்தில் தூக்கம் வரவில்லை). இந்தக் கொடுமையாவும், பஞ்சை உப்புத் தண்ணீரில் நனைக்காததால் வந்த விணை.

பின், காஃபியை வைத்து மூளையில் கட்டியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் வார்டன் ஹால்-ன் மனைவி மெலிண்டா-வை (Melinda Moores) காப்பாற்ற காஃபியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓர் இரவில், வார்ட்டன்-க்கு (வார்டன் வேறு, வார்ட்டன் வேறு) மயக்க மருந்து கொடுத்தும், பெர்சியை ஓர் இருட்டரையில் பூட்டி வைத்தும், ஹால்-ன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். (ஆனால், சிறையில் வார்ட்டன் திடீரென்று காஃபியின் கையை பிடித்து இழுக்கின்றான். அதனை வைத்து அவன் நல்லவனில்லை என்றும், அவன் மனதில் உள்ளவற்றையும், அவன் யார் என்பதையும் உணர்கிறான்). ஹாலின் வீட்டில் உள்ளே கட்டிலின் ஹால்-ன் மனைவி படுத்திருக்க, அவளை குணப்படுத்த நெருங்குகின்றான் காஃபி. அவள் அவனை பார்த்து "Pig fucker" என்று கூறுகிறாள் (கவனிக்க, கதை 1935-ல் நடக்கிறது. அந்த காலகட்டம் நிற வெறி மிகுந்த காலகட்டம்). இதனைப் பொருட்படுத்தாமல், மெலிண்டா-வை நெருங்கி, அவள் உதட்டில் வாய் வைத்து அவளின் நோயை வாங்கிக்கொள்கிறான். வழக்கம் போல அந்த நோயை சிறு பூச்சிகளாக வெளியேவிடாமல் உள்ளேயே வைத்துக் கொள்கிறான்.

பின் சிறைக்கு வந்து அந்த நோயை பெர்சிக்கு கொடுத்துவிடுகின்றான் காஃபி. திடீரென்று ஏற்பட்ட ஒரு வித மன அழுத்தத்தால் பெர்சி நேரே சென்று வார்ட்டனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகின்றான். இவை யாவும் கன நேரத்தில் நடந்து விடுவதால் யாராலும் தடுக்க முடியவில்லை. பின் பெர்சி மனநோயாளியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றான். பால்-ஐ அழைத்து அவன் கரம் பிடிக்க, தன் ஆயுளில் சிலவற்றை அளித்து, தான் உணர்வதை அவனுக்கும் உணர்த்துகிறான். அதன் படி, எந்த குழந்தைகளை கொன்றதாக பழி சுமத்தப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டதோ, அந்தக் குழந்தைகளை கற்பழித்துக் கொன்றவன் தான் வார்ட்டன். வார்ட்டன் ஒரு வீட்டில் வேலை பார்க்கிறான். அந்தக் குழந்தைகளை ஒரு நாள் அதிகாலை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்துக் கொன்று விடுகின்றான்.


Wild Bill Wharton: You love your sister? You make any noise, you know what happens. I'm gonna kill her instead of you. Understand?
John Coffey: He kill them wi' their love. Wi' their love fo' each other. That's how it is, every day, all over the world.


காஃபி, அந்தக் குழந்தைகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை. (அந்த வாசகம் தான் "I couldn't help it, boss. I tried to take it back, but it was too late"). ஆனால் அவன் தான் குழந்தைகளை கொன்றதான சந்தர்ப்பமும் சாட்சியும் முடிவுகட்ட அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. இதை உணர்ந்து பால், காஃபி-யிடம் அவனுக்கு உதவுவதாகவும், எங்காவது தப்பி ஓடிவிடுமாறும் கூறுகிறான். ஆனால் காஃபி, தான் மிக சோர்ந்து இருப்பதாகவும், நடப்பவைகளை பார்த்து வெறுத்து போய் விட்டதாகவும் அதனால் தான் சாக விரும்புவதாகவும் கூறுகிறான்.


Paul Edgecomb: What do you want me to do John? I'll do it. You want me to let you walk out of here and see how far you get?
John Coffey: Now why would you want to do a foolish thing like that?
Paul Edgecomb: When I die and I stand before God awaiting judgment and he asks me why I let one of HIS miracles die, what am I gonna say, that it was my job?
John Coffey: You tell God the Father it was a kindness you done. I know you hurtin' and worryin', I can feel it on you, but you oughta quit on it now. Because I want it over and done. I do. I'm tired, boss. Tired of bein' on the road, lonely as a sparrow in the rain. Tired of not ever having me a buddy to be with, or tell me where we's coming from or going to, or why. Mostly I'm tired of people being ugly to each other. I'm tired of all the pain I feel and hear in the world everyday. There's too much of it. It's like pieces of glass in my head all the time. Can you understand?
Paul Edgecomb: Yes, John. I think I can.


பின் கடைசியாக காஃபி-ன் execution. 'The Green Mile'-ல் அழைத்து வரும்பொழுது காஃபி அன்று மதியம் தூங்கியதாகவும் கனவில், Mouseville-ல் ஜிங்கில்ஸ் வித்தைகள் செய்து காட்டுவதாகவும், அங்கே அந்த இரு குழந்தைகளும் தன் மடியில், தலையில் ரத்தம் இல்லாமல், அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் ஜிங்கில்ஸ்-ன் விதைகளை கை கொட்டி சிரித்து ரசித்ததாகவும் கூறுகிறான். இந்த முறை வழக்கம் போல இல்லாமல் அனைவரின் கண்களிலும் கண்ணீர். தண்டனையை பார்க்க அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும் வருகின்றனர். அவனை கரிச்சுக் கொட்டுகின்றனர்.


John Coffey: There's lotsa people here that hate me, lots. I can feel it. It's like bees stingin' me.
Brutus 'Brutal' Howell: Well feel how we feel then. We don't hate you. Can you feel that?


பஞ்சை உப்புத்தண்ணீரில் நனைத்து தலையில் வைத்து அதன் மேல் மிண்சார கம்பி இணைக்கப்பட்ட தகடு பொருத்துகின்றனர்.


John Coffey: [singing as he's being strapped to the electric chair] Heaven, I'm in heaven... heaven... heaven...


முகத்தை கருப்புத் துணியால் மூடுகின்றனர். முகத்தை மூடினால் இருட்டாக இருக்கும். அதனால் மூட வேண்டாம் என்று காஃபி கூறுகிறான். அதன்படி துணியை எடுத்து விட்டு, சரியாக பத்து மணிக்கு "Roll on Two" சொல்ல, தண்டனை நிறைவேற்றப்படுகின்றது, அங்குள்ள சிறைக்காவலர்களின் கண்ணீருடன். இந்த முறை காமெரா தண்டனை விதிக்கப்படுபவரை தவிர்த்து, அங்குள்ளவர்களின் முகபாவங்களிலேயே நிகழும் சோகம் சொல்லப்படுகின்றது.

இத்துடன் flashback முடிவுபெற்று வயதான பால் பேசுகிறார். அதுதான் தான் கடைசியாக நிறைவேற்றிய தண்டனை என்றும் அதன் பிறகு தான் பணி மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு இடத்திற்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார். காஃபி இறந்த பிறகு ஜிங்கில்ஸ் வந்து பால் கையில் வந்து சேர்கிறது. அறுபது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு எலி இன்னும் உயிருடன் இருக்கிறது. அதுவே இவ்வளவு நாள் வாழும் பொழுது இன்னும் தான் எவ்வளவு ஆண்டு வாழவேண்டும் என்று தெரியவில்லை. அதுவும் தன் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தன் கண் எதிரிலேயே ஒவ்வொருவராக இறந்து போனாலும் தான் மட்டும் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஃபி தனக்கும் ஜிங்கில்ஸ்-க்கும் கொடுத்தது வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை என்று கூறி தூங்கப்போவதோடு படம் முடிகிறது.

நடிகர்கள்

Tom Hanks - Paul Edgecomb
David Morse - Brutus "Brutal" Howell
Bonnie Hunt - Jan Edgecomb
Michael Clarke Duncan - John Coffey
James Cromwell - Warden Hal Moores
Michael Jeter - Eduard Delacroix
Graham Greene - Arlen Bitterbuck
Doug Hutchison - Percy Wetmore
Sam Rockwell - 'Wild Bill' Wharton
Barry Pepper - Dean Stanton
Jeffrey DeMunn - Harry Terwilliger
Patricia Clarkson - Melinda Moores
Harry Dean Stanton - Toot-Toot
Dabbs Greer - Old Paul Edgecomb
Eve Brent - Elaine Connelly

Wednesday, August 09, 2006

கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்க

சிறிய வயதில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சேலத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு செல்வோம். என் உடன்பிறப்புக்கள் (cousions) மொத்தம், இந்தியாவின் சனத் தொகையில் கணிசமாக, சுமார் இருபது+. அதனால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. கேபிள் ஒளிப்பரப்பில் கோடை மாதங்களில் மட்டும், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், நூரு ரூபாய் (இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால்). அதில் ஒரு நாளைக்கு நான்கு திரைப்படங்கள். மற்றும் இரண்டு மாதத்திற்கு என்னென்ன திரைப்படங்கள் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிடும். அங்கே பார்த்த ஒரு தெலுங்கு டப்பிங் படம், பெயர் 'அபூர்வ சக்தி 369' என்று நினைக்கிறேன். பாலகிருஷ்னா நடித்தது. கதை கால இயந்திரம் பற்றியது. அதில் நம்ம ஹீரோ இறந்த காலம், எதிர்காலம் எல்லாம் போய் சிலுக்குடன் டான்ஸ் எல்லாம் ஆடிவிட்டு வருவார்.

நான் பலதடவை சிந்தித்ததுண்டு. இப்படிப்பட்ட இயந்திரம் உருவாக்கப்பட சாத்தியமுண்டா? நம்மால் இறந்த காலத்தினை பற்றிய நினைவுகள் உண்டு. ஆனால், எதிர்காலம் பற்றிய நினைவுகள் (அ) கணிப்புகள் ஏன் இல்லை. நேரம் ஏன் எப்போதும் முன்னோக்கியே செல்கிறது? அபத்தமாக தோன்றினாலும், இப்படி நினைப்பதை நிறுத்த முடிவதில்லை.

காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, முன்பிருந்த நிலையில் (past) பூமிக்கு திரும்ப முடியுமா? இப்படி பல கேள்விகள் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது. ஒருவனால் சுலபமாக காலத்தை நோக்கி பயனிக்க முடிந்தால், எப்படி இருக்கும்? General Theory of Relativity-ன் படி, உலகில் ஒளியை விட வேகமாக பயனிக்கும் பொருள் கிடையாது. ஆனால், அந்த வேகமே பத்தாமல் போனால்? ஒரு உதாரணம், ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர். ஒரு பொருளை நாம் பார்ப்பது, அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஒரு பொருள் சிகப்பாகத் தோன்றுகிறது என்றால், அந்தப் பொருள் அனைத்து வண்ணங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு, வெறும் சிகப்பு வண்ணத்தை மட்டுமே வெளியிடுகிறது என்று அர்த்தம். நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள். அது அங்கிருப்பது, அந்த நட்சத்திரம் வெளிப்படுத்தும் ஒளியாலேயே. ஆனால் அந்த ஒளி உங்களை வந்து சேர பல ஒளி ஆண்டுகள் ஆகும். அதனால், நீங்கள் பார்ப்பது எதுவும் அங்கு இல்லாமல் கூட இருக்கலாம். அந்த நட்சத்திரம் நகர்ந்து போய் இருக்கலாம். காரணம், இந்த உலகம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. அதனால், நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலங்கள் தாம் (எல்லாம் மாயா). இது மட்டும் அல்ல, நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், கீழே உள்ள உதாரணம் அறிந்துகொள்ள:

இரண்டு கடிகாரங்களை எடுத்துக் கொண்டு ஒன்றை உயரமான இடத்திலும், மற்றொன்றை பூமிக்கு அருகிலும் வைத்தால், இரண்டாவது கொஞ்சம் மெதுவாகத் தான் ஓடும். அதே போல, இரட்டையராய் பிறந்தவர்களில், ஒருவர் மலை உச்சியிலும், ஒருவர் கடல் மட்டத்திலும் வளர்ந்தால், முதலாமவர் இரண்டாமவரை விட வயதில் பெரியவராக இருப்பார். ஆனால், வித்தியாசம் மிக மிக சொற்ப அளவிலேயே இருக்கும். இதற்குப் பெயர் 'Twin Paradox'. இப்பொழுது ஒரு விண்கலத்தை, நமக்கு (அருகில்) நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் Alpha Centauri என்னும் நட்சத்திரத்திற்கு அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் அங்கு சென்று திரும்பி வர எட்டு ஒளி ஆண்டுகள் ஆகும். ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் பயனிக்கிறதோ அதுவே ஒரு ஒளி ஆண்டு (Light Year) எனப்படும். அதனால், நேரத்தை அளக்க பொதுவான காரணி இல்லை எனலாம். அதனால், வின்வெளியில் பயனிப்பவர், பூமியில் இருப்பவரை விட, குறைவான நேரத்தையே எடுத்துக் கொள்வர். அதனால், ஒருவர் ஒளியை விட வேகமாக பயனிப்பவராக இருப்பாராயின்(??), General Theory of Relativity-ன் படி அவரால், காலத்தில் பின்னோக்கியும் பயனிக்க முடியும்.

There was a young lady of Wight
Who traveled much faster than light.
She departed one day,
In a relative way,
And arrived on the previous night


சரி! விஞ்ஞானத்தை விட்டு வெளியே வருவோம். 2002-ல் வந்த ஒரு ஆங்கில படம் The Time Machine. எச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells)-ன் புதினத்தை மையமாகக் கொண்ட திரைப்படம். 1960-ல் ஒரு படம் வெளிவந்திருக்கிறது. இது இரண்டாவது. கதை 1903-ல் நடப்பதாக. படத்தில் நாயகன், Guy Pearce, காலத்தை நோக்கி பயனிக்கும் ஒரு கலனை கண்டுபிடிப்பார். அதில் 50 வருடம் முன்னோக்கி பயனிப்பார். அங்கே போர் சூழலில் அடிபட்டு மயங்கி விட, மயக்கம் தெளிந்து எழும் பொழுதும், அந்த கலன் அவனை சுமார் 8 இலட்சம் வருடங்கள் பயனித்திருக்கிறது. அங்கே மனித இனம் இருபிரிவாக பிரிந்திருக்கிறது, வேட்டையாடுபவர்கள் மற்றும் வேட்டையாடப்படுபவர்கள். அங்கிருக்கும் வேட்டையாடப்படுபவர்களை காப்பாற்றும் பொருட்டு அதன் தலைவனை, கால இயந்திரத்தில் அனுப்பிவிட்டு கதாநாயகன் அங்கேயே தங்குவதாக கதை. இதில் எனக்கு முதல் பாதி படம் மட்டும் தான் பிடித்தது. பிற்பாதி கதை ச்சும்மா உடான்ஸ்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்.

1) கதாநாயகன், ஒரு காட்சியில், கால இயந்திரத்தின் ஃபார்முலாவை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி க்லோஸ் அப்-ல் காட்டப்படும். மெள்ள காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், திரையில் ஒரு ஏனி தெரியும். அதாவது, கதாநாயகன் ஒரு ஏனியின் மேல் நின்று ஃபார்முலாவை எழுதிக் கொண்டிருப்பான். காமெரா பின்னால் நகரும். அந்தக் காட்சியில், அந்த அறை முழுக்க கரும்பலகையாக இருக்க, ஒரு ஏனியில் நின்றுக்கொண்டு அந்த ஃபார்முலாவின் continuation-ஐ எழுதிக்கொண்டிருப்பான்.
2) கால இயந்திரத்தில் அமர்ந்து அதை இயக்க ஆரம்பிக்க, அந்த அறையில் இருக்கும் (பல) கடிகாரங்கள் ஒரு கணம் நின்று, பின் பின்னோக்கி ஓட ஆரம்பிக்கும். அந்தக் காட்சி பார்க்கும் பொழுது ச்சும்மா 'நச்'னு இருக்கும்.
3) அந்தப் படத்தின் கடைசி காட்சியில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒன்று நிகழ்காலம், மற்றொன்று எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு. இரண்டும் ஒரே நேரத்தில் synchronised-ஆக வரும். இரண்டும் ஒரே இடத்தைக் காட்டுகிறது. முதல் பாதியில், கதாநயகனின் பாட்டி காவலரிடம், தன் பேரன் அந்த அறையில் தான் கடைசியாக இருந்ததாகவும், பின் காணாமல் போய்விட்டதாகவும் கூறுவாள். மற்றொரு பாதியில் (அதே இடத்தில், எட்டு இலட்சம் வருடங்களுக்குப் பிறகு) கதாநாயகன், அதுதான் தன் அறை என்றும், அதன் தொடர்பான காட்சியை விளக்கிக்கொண்டிருப்பான்.
4) தற்காலத்தில் இருந்து 50 வருடம் கழித்து பயனிக்கும் இடத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஒரு கண்ணாடியும் அதில் ஒரு உருவமும் தெரியும். அது ஒரு Virtual reality உருவம்.

நான் பல தடவை யோசிப்பேன், நமக்கு ஒரு கால இயந்திரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு பயனிக்கலாம் என்று. இரண்டு காலங்கள் நினைவுக்கு வரும்.

1) பள்ளியில் படிக்கும் பொழுது ஏமாங்கத நாடு என்னும் கற்பனை நாட்டினைப் பற்றிய ஒரு சூழல் சொல்லப்பட்டிருக்கும். அந்த நாட்டில் தென்னை மரத்தில் இருந்து ஒரு முற்றிய தேங்காய் விழும் பொழுது அது வரும் வழியில் பாக்கு பரம் போன்றவற்றின் மேல் பட்டு அந்தப் பழங்களை சிதைத்து பின் கீழே விழும். அந்த பரங்களின் நெருக்கத்தினை அப்படி விவரித்திருப்பார்கள். மேலும், அரிசி கொத்த வரும் கோழிகளை துரத்த, அங்கிருக்கும் கிழவி தன் காதில் இருக்கும் தங்கத்தோட்டினை கழற்றி வீச, அது அங்கே நடைவண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிம் நடை வண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொள்வதாக அந்த நாட்டின் வளங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும். இந்தக் காலங்கள் ஒன்று.

2) 'பொன்னியின் செல்வன்' படிக்கும் பொழுது நாம் என்னவோ அந்த காலத்திலேயே பயனிப்பது போல தோன்றும். அதுவும் அருள்மொழிவர்மனையும், வந்தியத்தேவனையும், குந்தவையும், நந்தினையையும், வானதியையும், பழுவேட்டரையரையும், அந்தக் கால காவிரியையும், மக்களையும், அந்தச் சூழலையும் வர்னித்திருப்பதைப் படிக்க படிக்க கால இயந்திரம் மட்டும் கிடைத்தால் அந்த காலகட்டதிற்கு செல்லவேண்டும் என்று தோன்றும்.


கடைசியாக, ஒருவேளை, உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்கே, எந்த காலகட்டத்தில் பயனிக்க விரும்புவீர்கள்? காரணம் என்ன? ஏன்? நேரம் இருந்தால் தட்டுங்கள், ச்சும்மா...


அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

E = MC2
கருந்துளைகள்
1-D, 2-D, 3-D, 4-D...
விண்கற்கள்
The Expanding Universe
அறிவியல் - வரமா / சாபமா?

Wednesday, August 02, 2006

The Bicycle Thief (1948)

ஊருக்கு ரயிலில் சென்று வரும்பொழுது ரயிலில் விற்கப்படும் டி.வி.டி-க்களை பொழுதுபோக்கிற்காக வாங்குவேன். பெரும்பாலும் புதிய படங்கள் தான் என்றாலும், ஒரு முறை சில பழைய ஆங்கில B/W படங்களையும் பார்த்தேன். அந்தப் படங்களின் பெயர்கள் பள்ளிக்கூட நாட்களில் கேட்டமாதிரி இருந்ததாலும் (The Bicycle Thief, My Fair Lady மற்றும் The Sound Of Music ஆகியன), பழைய படங்களின் டி.வி.டி-க்கள் விற்கப்படுகிறதே என்ற ஆச்சரியத்திலும் அதை வாங்கினேன். அதில் ஒன்று தான் இந்த "The Bicycle Thief" படம். 1949-ல் வந்தது. ["LADRI DI BICICLETTE"]கடைசி வரை அது ஃபிரஞ்சு/இத்தாலி/துருக்கி/ரோமானிய மொழியா என்று தெரியவில்லை. ஆனால், கதை ரோம்-ல் நடப்பதாக ஒரு வசனத்தில் வருவதால் அது ரோமானிய மொழியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். (கடைசியில் அது இத்தாலிய மொழி திரைப்படமாம். (Google இட்டேன்). இந்தக் கதையை சுட்டு தான் தமிழில் சிவாஜியின் இரண்டாவது(?) படமான "முதல் தேதி" செய்தார்களா என்று தெரியவில்லை. "முதல் தேதி"? அதாங்க என்.எஸ்.கே பாடுவாரே "ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்"-ன்னு. அது.


நம்ம ஊர் 60-களில் எப்படி இருந்திருக்குமோ, அதே நிலையில் தான் கதைக்களமும். ரோம் நகரம். வேலை கிடைக்காத நாட்கள். குழுமியிருக்கும் 30 பேர்களில் 2 பேருக்கு வேலை என்று அறிவிக்கும் முதல் காட்சியே வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்லிவிடுகிறது. அதில் கதாநாயகன் ரிஸ்ஸி அன்டோனியோ (Antonio Ricci)-விற்கும் கிடைக்கிறது. சுவரொட்டிக்களை ஒட்டும் வேலை. மாதம் 6000+ Lire(லிரா) சம்பளம். ஆனால் கட்டாயம் சைக்கிள் வேண்டும்.


மனைவி மரியா ரிஸ்ஸி (Maria Ricci)-யிடம் இதை சொல்ல, அவளோ தன் வரதட்சணையில் வந்த ஆறு படுக்கை விரிப்புகளை (யாருப்பா ஆறு போட கூப்பிட்டது?), நான்கு உபயோகித்தது, இரண்டு உபயோகப்படுத்தாதது என்று, 7500 லிரா-களுக்கு அடகு வைத்து, வட்டியுடன் 6500 லிரா-களை கொடுத்து சைக்கிளை மீட்டு தருகிறாள்.


மறுநாள் அன்டோனியோவும் அவன் பையன், புரூனோ (Bruno)-வும் வேலைக்கு போகின்றனர். புரூனோ ஒரு பெட்ரோல் பங்க்-ல் வேலை பார்க்கிறான். முதல் நாள் வேலை. மாலை ஏழு மணிக்கு வந்து கூட்டிச்செல்வதாக மகனிடம் சொல்லி செல்கிறான். சக ஊழியர் போஸ்டர் ஒட்டுவது எப்படியென்று செய்து காண்பித்து (demo class), செல்ல மும்முரமாக போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்க ஒரு திருடன் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடுகிறான். இவனும் துரத்திச் செல்ல, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடன் ஓடிவிடுகின்றான். (நம்ம ஊர் போல இருக்கும்) காவல்துறையில் புகார் கொடுக்கிறான். (போலீஸ்காரர் சக போலீஸ்காரரிடம் "Nothing! Just a Bicycle"). பேருந்தில் எழரைக்கு திரும்பி வந்து(!) மகனை கூட்டிச் செல்கிறான். வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், நண்பனைப் பார்த்து தன் கதையை சொல்கிறான். அவர்கள் மறுநாள் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்கும் இடத்துக்கு கூட்டிச் செல்வதாகவும், அங்கே தான் திருட்டுப் போன சைக்கிள்கள் கிடைக்கும், நம்ம சென்னை புதுப்பேட்டை மாதிரி, என்று சொல்கிறார்கள்.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சைக்கிள் parts-களை தேட அறிவுறுத்தப்பட்டு, தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. மதியம் ஆகிறது. நண்பர்கள் திரும்பிக் கொள்ள, இவனுக்கோ சைக்கிளை தேட வேண்டிய கட்டாயம். மகனுடன் சேர்ந்து தேடுகிறான். அப்பொழுது பார்த்து மழை. ஒரு கட்டிடத்திற்கு கீழே ஒதுங்குகிறான். அங்கே சற்று தூரத்தில் அவன் சைக்கிளில் ஒரு பிச்சைக்காரனிடம் வந்து கணக்கு செட்டில் செய்யும் ஒருவனைப் பார்க்கிறான். அவனைத் துரத்த, மீண்டும் தப்பிக்கிறான். அந்தக் பிச்சைக்காரனை ஒரு தேவாலயத்தில் நடக்கும் மாஸ்-ல் கண்டுபிடிக்கிறான். அவன் எதுவும் கூற மறுக்க, இவன் சற்றே அங்கேயே சண்டைப் போடுகிறான். பிச்சைக்காரனும் அந்த களேபரத்தில் தப்பிக்கிறான்.


பையனுக்கோ உச்சா அவசரம். அனால் போகக்கூட நேரமில்லை. காரணம் திருடனைப் பிடிப்பதே வேலையாகிப் போனதால். பையன் சோர்வடைந்ததைப் பார்த்து, விரக்தி அடைந்து, இனி கவலைப்பட்டு பிரயோசனமில்லை என்று, அவனை ஒரு நல்ல உணவகத்துக்கு கூட்டிச் செல்கிறான். "Why should I kill myself worrying when I'll end up just as dead?". புல் பாட்டில் வைனும், இரண்டு Mozzrellaas-ம் ("வைனுடன் அம்மா நம்மை பார்த்தார்கள் அவ்வளவுதான். நாம ஆம்பளைங்கதானே. பரவாயில்லை") சாப்பிடுகிறார்கள். அங்கே கணக்கு வேறு. "12000 + 2000 ஓவர்டைம் + Family Ammowance (800/day). இவ்வளவையும் ஒரு நாளில் இழக்க வேண்டுமா? தேடுவோம். வேறு வழியில்லை. அந்த குறி சொல்பவளிடமே செல்வோம்" என்று தேடுகிறார்கள் (சைக்கிளை அடகு கடையில் இருந்து மீடு வரும் வழியில், 50 லிரா-கள் கொடுத்து மரியோ அந்தக் குறி சொல்பவளிடம் சென்று கேட்பதை கிண்டலடித்தான்). குறி சொல்பவளோ, "இன்று கிடைத்தால் தான் ஆச்சு. இல்லையேல் இனி கிடைக்காது" என்று சொல்கிறாள்.


வெளியே வரும்பொழுது வழியில் அந்தத் திருடனை பார்க்கிறார்கள். அவனை துரத்திச் சென்று, (அவன் ஏரியாவில்) பிடித்து கேட்க, அவனோ போலீசிடம் தான் நிரபராதி என்று கூறுகிறான். போலீசும் அவன் வீட்டில் சோதனை செய்து பார்க்கிறார்கள்.


சரி இனி வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி, அங்கே ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நடக்கிறது. சைக்கிள் நிறுத்துமிடத்தைப் பார்க்கிறான். அதற்கு ஒரு காவலாளி. அதை விடுத்து சற்று தூரத்தில் ஒரு வீட்டின் வாசலில் தனியாக இருக்கும் ஒரு சைக்கிளைப் பார்க்கிறான். ஒரு முடிவு செய்தவனாய், பையனிடம் பணம் கொடுத்து அவனை பேருந்து பிடித்து வீட்டிற்கு செல்லுமாறும், தான் வந்து விடுவதாகவும் கூறுகிறான். பையன் பேருந்து அருகில் செல்ல பேருந்து நகர்ந்து விடுகிறது. தந்தையை நோக்கி வருகிறான். தந்தையோ நேரம் பார்த்து, விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விட்டு சைக்கிள் எடுக்க வரும் கூட்டத்துடனே சேர்ந்து விடலாம் என்று அந்தத் தனியாக நிற்கும் சைக்கிளை திருடி ஓடுகிறான். இவையாவையும் அந்ததப்பையனும் பார்க்கிறான். சைக்கிள் சொந்தக்காரன் கத்த, (அப்பொழுது மட்டும்) அவனைப் பிடித்து விடுகிறார்கள். அவமானம். கண்ணத்தில் சில் அடிகள் விழுகின்றது. தந்தை அடி வாங்குவதைப் பார்த்து அவரிடம் வருகிறான். போலீசும் வந்துவிடுகின்றது. அவனை இழுத்து செல்கிறார்கள். கீழே விழுந்த தொப்பியில் இருந்த தூசியைத் தட்டி எடுத்து வருகிறான் பையன். சைக்கிள் சொந்தக்காரனோ, அவனுக்கு ஒரு பையன் இருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு, புகார் கொடுக்காமல் அவனை விட்டுவிட சொல்லுகிறான். "I don't want to bother. The man has enough trouble" என்று க்கூறி அண்டோனியோ பக்கம் திரும்பி "A fine example you set for your son". அனைவரும் கலைந்து செல்கிறார்கள்.


பையன் தொப்பியை கொடுக்க, கண்ணீர், அவமானம், வெட்கம் எல்லாம் சேர்ந்து கொண்டு, (பையன் தந்தையைப் பார்க்க, விசும்பலுடம்) வீடு நோக்கி நடப்பதாக படம் முடிகிறது.


இதை எழுதும் பொழுது கூட அந்தக் கதையின் தாக்கம் எனக்கு கண்ணிரை வரவழைத்தது. படத்தில் குறிப்பிட வேண்டிய அம்சம், அண்டோனியோ மற்றும், முக்கியமாக, அந்தப் பையன் புரூனோ. அருமையான நடிப்பு. வேலைக்கு செல்லும் பொழுது கைக்குழந்தையான தங்கையை பாதிக்கும் என்று வீட்டு சன்னலை மூடும் இடம், சாப்பிடும் இடத்தில் அருகில் இருக்கும் இருக்கும் மற்றொரு பணக்கார பையன் சாப்பிடும் Mozzrellaas-க்களை ஏக்கத்துடன் பார்ப்பதும், தன்னை மற்றவர்கள் நசுக்கி இடிப்பதைகூட பார்க்காமல் சைக்கிள் நியாபகத்திலேயே இருக்கும் தந்தையை பரிதாபமாக பார்க்கும் இடம், தந்தை கணக்கு சொல்ல சொல்ல எழுதிவிட்டு "We will find it" என்று சொல்லும் இடம், தந்தையை மற்றவர்கள் அடிக்கும் இடத்தில் வெறும் கண்ணீரை மட்டுமே விட்டு மற்றவர்களின் பரிதாபத்தை சம்பாதித்து, இப்படி பல இடங்கள் நம் நெஞ்சை உருக்கிவிடுகின்றான். அண்டோனியோ. ஒன்றும் செய்ய முடியாமல் கையாலாகாதத்தனத்தை வெளிப்படுத்தி, பையனை பார்க்க முடியாமல் கண்ணீர் விட்டு...அருமையான பாத்திர படைப்பு.


Antonio Ricci - Lamberto Maggiorani
Bruno - Enzo Staiola
Maria - Lianella Carell
Begger - Carlo Jachino
Directed by Vittorio DeSi


Wikipedia-வில்


Quotes from the film


Antonio Ricci: "You live and you suffer."
Antonio Ricci: "Why should I kill myself worrying when I'll end up just as dead?"
Antonio Ricci: "There's a cure for everything except death."


சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் பாருங்களேன்.








Wednesday, July 26, 2006

The Matrix - கதை

இந்தப் பதிவு ஸ்ரீதர் அவர்களின் பதிவுக்கு ஒரு விளக்கம் கொடுப்பதற்காக.

கதை 2100-ல் நடப்பதாக நினைக்கிறேன். இந்த உலகில் மனிதன் தன் பாதுகாப்புக்காக இயந்திர போலீஸை உருவாக்குகிறான். அது தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தியையும் சேர்த்து அதற்கு வழங்குகின்றான். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழிந்து சூரிய ஒளியும் இல்லாமல் போய்விடுகிறது. அந்த இயந்திர போலீஸுக்குத் தான் தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியுமே. அது வாழ உஷ்னம் தேவைப்படுகிறது. சூரிய ஒளி இல்லாததால் அது மனிதனின் உடம்பில் இருந்து வரும் உஷ்னத்தை உபயோகித்துக் கொள்கிறது. அதனால், மனிதன் பிறந்ததும் (அல்லது உருவாக்கப்பட்டதும்), அவனை கோமா நிலையில் வைத்திருந்து, அவன் உடம்பிற்கு ஊட்டச்சத்தாக + கெடாமல் இருக்க சுற்றியிருக்கும் நீர் போன்ற திரவம், மற்றும் அவன் உடம்பில் இயந்திரங்களால் அவன் மூளையை இயக்கும் சாதனங்கள். ஆனால் அவன் தான் 20-வது நூற்றாண்டில் இருப்பதாகவும், சாதாரண வாழ்க்கை வாழ்வது போலவும், தினமும் வேலைக்கு சென்று வருவது போலவும், ஒரு மாய உலகில் (அது தான் Matrix) உலவ வைக்கிறார்கள். அதில் நம் கதாநாயகன் நியோ ஒரு hacker. அதனால், Mophias (மொட்டைத் தலை) அவனை வேண்டி அழைத்து தன் குழுவில் சேர்க்கிறான். Mophias என்பவன் தன் குழுக்களோடு மற்ற மனிதர்களை விடுவிக்க போராடும் ஒரு தலைவன். அப்பொழுது தான் இந்த உலகில் உள்ள மக்கள் யாவரும் எவ்வாறு matrix-ல் இருக்கிறார்கள் என்று விளக்குகிறார். இது தான் படத்தின் அருமையான கட்டம். அதற்காகத்தான் Neo-விற்கு இரு மாத்திரைகள், ஒன்று சிகப்பு மற்றொன்று பச்சை. சிகப்பு அவன் நினைவை திரும்ப வைப்பதற்கு (இது one-way), மற்றொன்று அவன் Mophias-ஐ சந்தித்ததை மறந்து மீண்டும் தன் பழைய நிலைக்கே கனவு என நினைத்து திரும்புவது. இது முதல் பாகம். (மற்ற பாகங்கள் சுத்த பேத்தல்).

இந்த படத்தில் சிலிர்க்க வைப்பது, மனிதன் digital-ஆக மாறி தொலைபேசி வழியாக மறுமுனையை அடைவது, சண்டைக்காட்சிகள் + கிராபிக்ஸ், மூளையில் upload செய்யப்படும் சண்டை மற்றும் இத்யாதி செயலிகள் (softwares), illusion-ல் ஸ்பூன் போன்றவை வளைவதும் அதன் காரணங்களும், Neo எவ்வளவு வேகம் என்று காட்ட காற்றை கிழிக்கும் துப்பாக்கி குண்டுகள் போன்றவை.

இது நான் அறிந்த Matrix கதை. இதில் பிழையிருந்தால் கூறவும். இதைப் புரிந்து கொள்வதற்கு சுமார் 6 முறை பார்த்தேன்.

Monday, July 10, 2006

சச்சின் என்ன பெரிய்ய்ய்ய்ய சச்சின்?


மேலே "சச்சினும் சென்செக்ஸும்"...(க்ளிக்கி பாருங்க)

இப்பொழுது மறுபடியும் இலங்கை கிரிக்கெட் அணி பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது(!?). காரணம். நேற்றுமுன்தினம் நெதர்லாந்து அணியிடம் பேட் செய்து 443 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. இதில் இலங்கையின் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா 157 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். நிச்சயம் கிரிக்கெட் உலகில் தலை சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவர். அதே போல, நிறைய ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட தூரத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பது என்னுடைய favourite சச்சின். சிறிய வயதில் அவ்வளவாக கிரிக்கெட் பார்க்க மாட்டேன். பின் தமிழக வீரர் சிறீகாந்த் வந்த பிறகு சற்று பார்க்க ஆரம்பித்தேன். அப்பொழுது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. பின் வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். அப்பொழுது உலகக் கோப்பை நடந்தது. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் ஆட்டம் இந்தியா (எ) ஜிம்பாப்வே. கபில்தேவ் துவக்க ஆட்டக்காரர். வந்து ஒரு ஆறு மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் எடுத்து சென்றார். இந்தியா அந்த ஆட்டத்தில் சற்றே கடினமாக வெற்றி பெற்றது.

அதற்குப் பின் கூட கிரிக்கெட்டில் ரொம்ப ஆர்வம் எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும் பொழுது (இப்பொழுது கால்பந்து பார்ப்பது போல) ஆர்வமில்லாமல் தான் பார்த்தேன். அப்பொழுது சச்சின் என்றொரு பையன் வந்தான். முதல் ஆட்டத்தில் 'டக்' (15-நவம்பர்-1989-ல் பாகிஸ்தான் உடன்). பின் ஒரு நாள் ஆட்டங்களில் ஒரு இடை நிலை ஆட்டக்காரர் (middle order batsman). அப்பொழுது யாரும் சச்சினை பாராட்டவும் மாட்டார்கள் திட்டவும் மாட்டார்கள், 1994 மர்ச் 27-ல் ஆக்லாந்தில், நியூசிலாந்துக்கு எதிராக ஈடன் பார்க்-ல், தன்னுடைய 70வது ஆட்டத்தில், 49 பந்துகளில் 82 அடிக்கும் வரை. அவற்றில் 72 ஓட்டங்கள் பவுன்டரிகளாக வந்தவை. அந்த ஆட்டம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கபிலும், சிறீநாத்தும் நியூசிலாந்தை 142 ஓட்டங்களுக்கு சுருட்டினர். நியூசிலாந்துக்கு ஆட்டம் முடிந்து பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது சச்சின் அசாரிடம் தான் துவக்க ஆட்டக்காரராக இறங்குவதாக கூறினார். இதை வர்ணனையாளர் கூறிக்கொண்டே வந்தார். அந்த ஆட்டம் தான் தலைவரின் வாழ்க்கையில் திருப்பு முனை. அந்த ஆட்டம் 23.2 ஓவரிலேயே முடிந்தது. அதற்கு மறுநாள் தினமலரில் விளையாட்டுச் செய்தியில் வந்த செய்தி "ஸ்ரீகாந்த்தாக மாறினார் டெண்டுல்கர்".

பின் அந்த ஆட்டத்திற்கு பிறகு சச்சின் ஃகிராப்பில் ஏறுமுகம் தான். தன்னுடைய 79வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் தன் முதல் சதத்தை (130 பந்துகள்) பதிவு செய்தார். அதில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்பொழுது ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது.

சச்சின் - தணித்துவம்


கிரிக்கெட் ஆட்டத்தில் எவ்வளவோ பெரிய ஜாம்பவாண்கள் இருந்தாலும், சச்சின் மட்டும் ஏன் மற்றவரிடம் இருந்து வேறுபடுகிறார்? கங்குலி 100 அடித்து 'அவுட்' ஆனாலும், "இன்னும் ஆடியிருக்கலாமோ?" என்று ஆதங்கப்படுபவர், சச்சின் "0" ஆனால், "ப்ச்...பாவம்" என்று தான் சொல்வார்கள். சச்சின் மற்ற வீரர்களிடமிருந்து தணித்துவம் பெற காரணங்கள் என்ன?

சச்சின் ஆட ஆரம்பித்த பொழுது இந்திய அணி ஒன்றும் பெரிய அணி அல்ல. அதனால் முழுக்க முழுக்க சச்சினையே சார்ந்து இருந்தது இந்திய அணி. 100 கோடி மக்களின் பாரத்தையும் ஒருவனே சுமக்க வேண்டியது ஆயிற்று. இது நிதர்சனமான உண்மை. நீங்கள் மைதானதிற்கு போகிறீர்கள். சுற்றி இருப்பவர்கள் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ஆரவாரம். நீங்கள் அடிக்கும் 4-க்கும் 6-க்கும் அப்படி ஒரு பரவசம். நீங்கள் உண்மையாகவே அவர்களுக்காகவேனும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுமா? இல்லையா? அந்த pressure-ல் விளையாடும் பொழுது சிறு தவறு நடந்தாலும் நூறு கோடி இதயங்களை நொடியில் நொறுக்கிவிடும். எனக்குத் தெரிந்து உலகத்தில் அதிகமாக ஃபிரஷர் கொடுக்கப்பட்ட மனிதர் சச்சினாகத்தான் இருக்க முடியும்.

மிஸ்டர் கிளீன்

இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில், அசாரும், ஜடேஜாவும் சேர்ந்து விலைபோய்விட்டார்கள் என்று பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் சச்சினிடம் கூறினாராம். சச்சின், "நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்" என்று சொல்லியிருக்கிறார். மறுநாள் ஆட்டத்தில் அசாரும், ஜடேஜாவும் ரன்-அவுட் ஆக(?!), சச்சின் சதம் அடித்து வெற்றியை ஈட்டுகிறார். இந்த செய்தி அன்று இந்தியா டுடே-வில் வந்தது. (இதில் ஜடேஜாவின் பாணி தான் கிளாசிக். அதாவது அவுட் ஆக மாட்டார். ஆனால், மெதுவாக, ஆமை வேகத்தில் விளையாடி அணியின் ஒட்டுமொத்த ரண் விகிதத்தை கட்டுப்படுத்திவிடுவார்). அணியில் யார் விலை போனாலும் சச்சின் விலை போகாதது, மற்றும் தன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் அவர் மிஸ்டர் கிளீன்-ஆகவே இருக்கிறார். கங்குலிக்கு சச்சின் போல புகழடைய ஆசை. சச்சின் தன் குடும்ப வாழ்க்கையில் மிஸ்டர் கிளீன். அந்த விடயத்தை வைத்து தான் கங்குலி நக்மாவை கழட்டிவிட வைத்தார்கள். டாரல் ஹார்ப்பர் முதல் ஸ்டீவ் 'ஃபக்'னர் வரை யார் யாரோ சச்சினை களங்கப்படுத்த முயன்றும் முடியவில்லை. மேலும் எந்த பிரச்சிணையிலும் தலையிடாமல், கரும்புள்ளி இருக்காமல் பார்த்துக் கொள்வது சச்சினின் ஸ்பெஷாலிட்டி (இது ஒரு வகையில் சுயநலமும் கூட. ஆனால், இதுவும் தேவையானதே).

சேர்க்கை @ 05-Feb-2014

2006-ல் எழுதியது இந்த கட்டுரை. இன்னைக்கு அதனை பற்றின ஒரு வீடியோ பார்த்தேன். அது இங்கே

நாகரீகம்

சச்சின் எந்த நாட்டுக்கு போனாலும் அனைத்து நாட்டவரும் அவரையே குறிவைப்பார்கள். ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் ஆட்டங்களில், மொத்தம் 6-ல் 3 இன்னிங்க்ஸில், சச்சினுக்கு டேரல் ஹார்ப்பர் தவறான முறையில் அவுட் கொடுத்தார். ஒருமுறை பந்து தலைக்கு மேலே போகிறது என்று உட்காரும்பொழுது பந்து தலைக்கவசத்தில் பட்டதற்காக எல்.பி.டபிள்யூ முறையிலும், பந்து மட்டையில் படாமல் பேடில் பட்டு சில்லி போயின்ட்ல் பிடிக்கப்பட்டபொழுதும் காட்ச் என்று அவுட் கொடுத்தார்.



அந்த தொடரில் இந்தியா இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும், இந்த தவறான அம்பயரிங் மட்டும் இல்லாதிருந்தால். மேலும், 2001 நவம்பர் 19-ல் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபத்தில் நடந்த ஆட்டத்தில் பந்தை துடைத்ததற்காக (சச்சின் பந்தை சேதப்படுத்தமாட்டார் என்பது என் ஆழமான நம்பிக்கை) அவருடன் சேர்ந்து மேலும் ஐந்து பேருக்குத் தடை விதித்தார் நடுவர் மைக் டென்னஸ் (சித்துவின் கமென்ட், "White hen laying black eggs"). இதுவும் சச்சினையே குறி வைத்து செய்ததாகும். ஆனால், ஒவ்வொரு தீர்ப்பும் தனக்கு எதிராக தரப்பட்டபொழுதும் "அம்பையர்களும் மனிதர் தாம், அவர்களும் தவறுகள் செய்வார்கள்" என்று தான் சொன்னார். ஒரே ஒரு முறை தவறான தீர்ப்புக்காக ஒரு வினாடி அம்பையரை முறைத்தார். ஆனால், விளையாட்டின் என்றுமே நிதானம் இழக்காமல் அந்த நாகரீகத்தை கடைப்பிடித்தார் சச்சின்.

Consistent

இது ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும் முக்கியமானது மற்றும் கடிணமானதும் கூட. லாராவின் சாதனைகளைப் பார்த்தால், ஒரு வருடம் 2000 ஓட்டங்கள் எடுத்திருப்பார். அடுத்த வருடம் 1000 கூட தாண்டியிருக்க மாட்டார். மீண்டும் அடுத்த வருடம் விசுவரூபம் எடுத்து 2500 எடுத்திருப்பார். ஆனால், சச்சின் அப்படியில்லை. எப்பொழுதும் அந்த consistent-ஐ காப்பாற்றியிருப்பார். ஒரு ஆட்டக்காரராக இருந்த பொழுதும், அணித் தலைவராக இருந்த பொழுதும் சச்சினின் average ஒரே மாதிரியாகவே இருக்கும். லாராவை போலவே தான் ஜெயசூர்யாவும். 1996 உலகக் கோப்பையில் விசுவரூபம் எடுத்தார். பின் அவரின் அணி தளர்ந்து போனதும் ஜெயசூர்யாவிம் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இப்பொழுது மறுபடியும் பின்ன ஆரம்பித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த consistent-ஐ அப்படியே காப்பாற்றியிருப்பது சச்சினுக்கு அடுத்தபடியாக சிலரே. அவர்களில் முக்கியமானவர்கள் வாசிம் அக்ரம், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர். மாத்யூ ஹேடன் என்ன ஆனார்? ஒரு கட்டத்தில் சச்சின் 15 சதத்துடனும், சயீத் அன்வர் 16 சதத்துடனும் இருந்தனர். ஆனால், சச்சின் 31வது சதம் அடிக்கும் பொழுது சயீத் அன்வர் தன் 17வது சதத்தை அடித்தார். (Of course, உடல் ரீதியாக பிரச்சினையால் சில காலம் சச்சினால் பழையபடி ரண்களை அடிக்க முடியவில்லை தான்). பழைய படி aggressive இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், அவர் ஆட்டம் மிகவிம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இப்பொழுது சேவாக்கை பார்த்தால் நின்றுகொண்டே கம்பு சுத்துவது மாதிரி தான் இருக்கிறது. ஆனால், சச்சினிடம் அந்த classic இருக்கும்.

பேட் பேசும்

சச்சின் தன்னைப் பற்றிய விமரிசனம் எழும்போதெல்லாம், அதற்கான பதில் ஆட்டத்தின் மூலமாகவே இருக்கும். ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலங்கா, ஷோயப் அக்தர், ஆண்டி காடிக், ஷேன் வார்னே மறந்திருக்க மாட்டார்கள். சென்ற உலகக் கோப்பையில் சச்சினைப் பற்றி பேசினவர்கள் எல்லோருக்குமே அடி விழுந்தது. ஷோயப் அக்தரின் ஒரே ஓவரில் 18 ரண்கள். மறக்க முடியாதது இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டி காடிக் பந்தில் leg side-ல் flick செய்து அடித்த சிக்ஸர்.

அந்த சிக்ஸர்...



அதன் விடியோ...



"I would not even dream of becoming a bowler if I have to face this little man. Sachin has to his credit a lot of under-rated test match centuries. Centuries which I have seen on tv, and for which I would have given more money than watching a double or a triple century from Lara or Hayden or Richards." - ஆண்டி காடிக். இது பல முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிகம் பேசுபவர்களுக்கு தன் ஆட்டத்தால் அடி.

சார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் இரண்டு சதங்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். நாம் மறந்தாலும் மைக்கேல் காஸ்ப்பரோவிச்சும், ஷேன் வார்னேவும் மறக்க பாட்டார்கள். ஆட்டம் முடிந்து வரும் பொழுது பவுன்டரிக்கு வெளியே நின்று சக ஆட்டக்காரர் சித்து "சல்யூட்" அடித்து வரவேற்பார். சச்சின் "என்ன சித்து இது?" என்பது போல பார்த்து சிரித்துக் கொண்டு கேட்பது போல ஒரு படம் Sportstar இதழில் வந்தது. ஷேன் வார்னே தன் மேல் சட்டையை கழற்றி அதில் சச்சினின் கையெழுத்தை வாங்கினார். அந்த தொடர் முந்த பிறகு வார்னே ஒரு பேட்டியில், "சச்சின் இறங்கி வந்து பந்தை அடித்தபொழுது பந்து பேட்டின் விளிம்பில் பட்டது. அது லாங்-ஆன் திசையில் காட்ச் போகும் அன்று நினைத்திருந்தேன். ஆனால் அது சிக்ஸர் ஆனது.", "படுத்துத் தூங்கும் பொழுதும் கணவில் சச்சின் சிக்ஸர் அடிப்பது தான் வருகிறது." என்று கூறினார்.



ருத்ர தாண்டவம்...



இந்த ஆட்டத்தின் நடுவே மனற் புயல் வீசியது. அப்பொழுது மற்ற வீரர்கள் உடம்பை வளைத்து கீழே படுத்துக் கொண்டார்கள், மணற்புயலில் இருந்து தப்பிக்க. ஆனால், சச்சின் மட்டும் அந்த புயலுக்கு முகம் கொடுக்காமல், ஒற்றை காலை மடக்கி, மட்டையை ஊன்றி கொண்டு மறு திசை பார்த்துக் கொண்டிருந்தார். (வர்ணனையாளரும் இந்த gesture-ஐ வெகுவாக புகழ்ந்தார்.

ஒருமுறை தெனாப்பிரிக்காவிற்கு எதிரான சகாரா தொடரில், ஆலன் டொனால்டு ஒரு short pitch பந்தை வீச, சச்சின் ஒரு அடி முன்னே வந்து போயின்ட் திசையில் ஒரு ஷாட் அடிப்பார். அந்தப் பந்து நேராக போயின்டில் நின்றிருந்த டேரல் கல்லினன் கைக்கு வந்தது. ஆனால் பந்து வந்த வேகத்தைப் பார்த்த கல்லினன் கையை எடுத்துவிட பந்து கண் இமைக்கும் நேரத்தில் பவுன்டரிக்கு சென்றது.

சச்சினின் staright drive, மாஸ்டரின் ஸ்பெஷாலிடிக்களில் ஒன்று.

சச்சினிடம் எனக்குப் பிடித்தது அவரின் singles-ஐ முடிவு செய்யும் திறமை. அதற்கு நல்ல கணிதமூளை அவசியம். அவ்வளவாக ரன்-அவுட் ஆகமாட்டார் சச்சின். மேலும் கச்சிதமாக 'ஒற்றை ரண்'களை சேகரிப்பார். அதுவும் "மின்னலு" வேகத்தில். இது ஒரு சிறந்த ஆட்டக்காரருக்கான அழகு. நல்ல பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ஸ்லிப்பிலேயே ஃபீல்டிங் செய்வர் (அல்லது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்பவர்கள் பெரும்பாலும் நல்ல பேட்ஸ்மேன்களாக உருவாகுவர்). காரணம், ஸ்லிப்பில் பந்து வீச்சாளர் வீசும் பந்து துல்லியமாக கவணிக்கப்படுவதால்.

பந்தும் பேசும்

சச்சின் பேட்ஸ்மேனாக மட்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை. 1993 நவம்பர் 24-ல் ஹீரோ கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, அரையிறுதி போன்ற ஆட்டத்தில், பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார் சச்சின். வெற்றிக்குத் தேவை 6 ரண்கள். ஆனால் சச்சின் அபாரமாக வீசி 3 ரண்களை மட்டுமே கொடுத்து வெற்றித் தேடித் தந்தார். கவாஸ்கரின் பாராட்டு "The man with the golden arms". மேலும் பல இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு விக்கெட் விழ்த்தித் தந்தார். ஆனால், கங்குலியின் தலைமையில் அணி இருந்த பொழுது சச்சினுக்கு பந்து வீச வாய்ப்புத் தராதது வேதனையானது. (இதனைப் பற்றின உண்மைகள் கண்டிப்பாக யாராவது ஒரு வீரர் ஓய்வு பெற்ற பின் புத்தகம் எழுதும் பொழுது தெரிய வரும்). சச்சினின் பந்துவீச்சு பெரும்பாலும் ஏமாற்று வீச்சே. ஒரு முறை பந்து வீசும் பொழுது இப்படி போட்டார்கள் "சச்சின் - Right Arm Off Break, Leg Break, Medium, Medium Fast".

சச்சினை இரண்டு வெவ்வேறு தடவைகளில் செய்தது எனக்குப் பிடிக்காமல் போனது.

1) சச்சின் எப்பொழுதும் ஒற்றை ஓட்டத்தை (single but calculated run) மிகச்சரியாக கணிக்கும் திறன் அதிகம். அதனால், அதிக தடவை ரன்-அவுட் ஆனதில்லை. ஆனால், ஒரு முறை, இக்கட்டான நிலை. சச்சின் டெஸ்ட்டில் தன் (முதல்?) இரட்டைச் சதம் அடிக்கும் ஆட்டம் மற்றும் ஃபார்ம்-அவுட்டான சமயம். மூன்றாவது ரண் எடுக்கும் பொழுது அசட்டையால் வந்த பொழுது ரன்-அவுட் ஆகும் நேரம். எந்த காலகட்டத்திலும் ரண் முடிப்பதற்காக கீழே விழமாட்டார். ஆனால் தலைவர், அன்று தான் ஆட்டமிழக்கக்கூடாது என்பதற்காக கீழே விழுந்தான். அன்று சச்சின் ரன் அவுட் என்று நினைக்கிறேன். இது தான் சச்சின் வாழ்க்கையில் விழுந்த ஒரே தடவை என்று நினைக்கிறேன்.

2) எப்பொழுது நடுவர் தவறு செய்தாலும் பெருந்தன்மையோடு மன்னிக்கும் சச்சின், ஒருமுறை நடுவர் சச்சினுக்கு அவுட் தரவில்லை. ஆனால், பந்து பேட்டில் உரசிச் சென்று கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது நன்றாக தெரிந்தது. அப்பொழுது சச்சின் தானாக வெளியேரவில்லை (ஒருவேளை சச்சினே அறியலையோ?).

எனக்கு இரண்டு ஆசைகள்.

1) சச்சினுக்கு கிரிக்கெட் ஆடும் பொழுதே "சர்" பட்டம் கொடுக்க வேண்டும்.

2) சச்சினுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சுருங்கச் சொன்னால், லாராவின் back lift power, டிராவிட்டின் style, கில்கிறிஸ்ட்டின் consistent, க்ளூஸ்ணரின் அதிரடி, ஒரு mathematician-ன் முடிவெடுக்கும் திறன், மெக் கிராத் - வாசிம் அக்ரமின் துல்லியம், கங்குலியின் sixer, ஷாட்டை அழகாக முடிக்கும் அந்த perfection, தாமஸ் ஆல்வா எடிசனின் அர்ப்பனிப்பு, ஷாஜகானின் காதல், பாலே நடனக்காரரின் foot work, ஹன்சி கிரோனியேவின் பெருந்தண்மை ஆகியவையின் கலவை தான் சச்சின். சும்மாவா சொல்வோம், "If Cricket is our religion, then Sachin is our GOD"-னு.

இப்போ சொல்லுங்க! சச்சின் நெசமாலுமே பெரிய்ய்ய்ய்ய சச்சின் தானே??

கடைசியாக...

Comments on Sachin

Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching.
- Placard at the SCG as Sachin was making his century,2008 January


I saw him (Sachin) playing on television and was struck by his technique, so I asked my wife to come look at him. Now I never saw myself play, but I feel that this player is playing much the same as I used to play, and she looked at him on Television and said yes, there is a similarity between the two...hi compactness, technique, stroke production... it all seemed to gel.
- Sir Don Bradman

Don't bowl him bad balls, he hits the good ones for fours.
- Michael Kasprowicz

"I have seen God, he bats at no. 4 for India"
- Mathew Hayden:

"On a train from Shimla to Delhi, there was a halt in one of the stations. The train stopped by for few minutes as usual. Sachin was nearing century, batting on 98. The passengers, railway officials, everyone on the train waited for Sachin to complete the century. This Genius can stop time in India!!"
- Peter Roebuck

Sachin is a genius. I'm a mere mortal.
- Brian Lara

"There are 2 kind of batsmen in the world. One Sachin Tendulkar. Two all the others."
- Andy Flower

I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player.
- Shane Warne

The pressure on me is nothing as compared to Sachin Tendulkar. Sachin, like God, must never fail. The crowd always expects him to succeed and it is too much pressure on him
- Mark Waugh


Sachin Tendulkar - The 'CRICKET GOD'



பிற்சேர்க்கை:

சச்சினின் மிக நீண்ட........ சாதனைப் பட்டியல்!

1. Highest Run scorer in the ODI
2. Most number of hundreds in the ODI 41
3. Most number of nineties in the ODI
4. Most number of man of the matches(56) in the ODI's
5. Most number of man of the series(14) in ODI's
6. Best average for man of the matches in ODI's
7. First Cricketer to pass 10000 run in the ODI
8. First Cricketer to pass 15000 run in the ODI
9. He is the highest run scorer in the world cup (1,796 at an average of 59..87 as on 20 March 2007)
10. Most number of the man of the matches in the world cup
11. Most number of runs 1996 world cup 523 runs in the 1996 Cricket World Cup at an average of 87..16
12. Most number of runs in the 2003 world cup 673 runs in 2003 Cricket World Cup, highest by any player in a single Cricket World Cup
13. He was Player of the World Cup Tournament in the 2003 Cricket World Cup.
14. Most number of Fifties in ODI's 87
15. Appeared in Most Number of ODI's 407
16. He is the only player to be in top 10 ICC ranking for 10 years.
17. Most number of 100's in test's 38
18. He is one of the three batsmen to surpass 11,000 runs in Test cricket, and the first Indian to do so
19. He is thus far the only cricketer to receive the Rajiv Gandhi Khel Ratna, India's highest sporting honor
20. In 2003, Wisden rated Tendulkar as d No. 1 and Richards at No. 2 in all time Greatest ODI player
21. In 2002, Wisden rated him as the second greatest Test batsman after Sir Donald Bradman.
22. he was involved in unbroken 664-run partnership in a Harris Shield game in 1988 with friend and team mate Vinod Kambli,
23. Tendulkar is the only player to score a century in all three of his Ranji Trophy, Duleep Trophy and Irani Trophy debuts
24. In 1992, at the age of 19, Tendulkar became the first overseas born player to represent Yorkshire
25. Tendulkar has been granted the Rajiv Gandhi Khel Ratna, Arjuna Award and Padma Shri by Indian government. He is the only Indian cricketer to get all of them.
26. Tendulkar has scored over 1000 runs in a calendar year in ODI's 7 times
27. Tendulkar has scored 1894 runs in calendar year in ODI's most by any batsman
28. He is the highest earning cricketer in the world
29. He has the least percentage of the man of the matches awards won when team looses a match.. Out of his 56 man of the match awards only 5 times India has lost.
30. Tendulkar most number man of match awards(10) against Australia
31. In August of 2003, Sachin Tendulkar was voted as the "Greatest Sportsman" of the country in the sport personalities category in the Best of India poll conducted by Zee News.
32. In November 2006, Time magazine named Tendulkar as one of the Asian Heroes.
33. In December 2006, he was named "Sports person of the Year
34. The current India Poised campaign run by The Times of India has nominated him as the Face of New India next to the likes of Amartya Sen and Mahatma Gandhi among others.
35. Tendulkar was the first batsman in history to score over 50 centuries in international cricket
36. Tendulkar was the first batsman in history to score over 75 centuries in international cricket:79 centuries
37. Has the most overall runs in cricket, (ODIs+Tests+ Twenty20s) , as of 30 June 2007 he had accumulated almost 26,000 runs overall.
38. Is second on the most number of runs in test cricket just after Brian Lara
39. Sachin Tendulkar with Sourav Ganguly hold the world record for the maximum number of runs scored by the opening partnership. They have put together 6,271 runs in 128 matches
40. The 20 century partnerships for opening pair with Sourav Ganguly is a world record
41. Sachin Tendulkar and Rahul Dravid hold the world record for the highest partnership in ODI matches when they scored 331 runs against New Zealand in 1999
42. Sachin Tendulkar has been involved in six 200 run partnerships in ODI matches - a record that he shares with Sourav Ganguly and Rahul Dravid
43. Most Centuries in a calendar year: 9 ODI centuries in 1998
44. Only player to have over 100 innings of 50+ runs (41 Centuries and 87 Fifties)(as of 18th Nov, 2007)
45. the only player ever to cross the 13,000-14,000 and 15,000 run marks IN ODI.
46. Highest individual score among Indian batsmen (186* against New Zealand at Hyderabad in 1999).
47. The score of 186* is listed the fifth highest score recorded in ODI matches
48. Tendulkar has scored over 1000 ODI runs against all major Cricketing nations.
49. Sachin was the fastest to reach 10,000 runs taking 259 innings and has the highest batting average among batsmen with over 10,000 ODI runs
50. Most number of Stadium Appearances: 90 different Grounds
51. Consecutive ODI Appearances: 185
52. On his debut, Sachin Tendulkar was the second youngest debutant in the world
53. When Tendulkar scored his maiden century in 1990, he was the second youngest to score a century
54. Tendulkar's record of five test centuries before he turned 20 is a current world record
55. Tendulkar holds the current record (217 against NZ in 1999/00 Season) for the highest score in Test cricket by an Indian when captaining the side
56. Tendulkar has scored centuries against all test playing nations.[7] He was the third batman to achieve the distinction after Steve Waugh and Gary Kirsten
57. Tendulkar has 4 seasons in test cricket with 1000 or more runs - 2002 (1392 runs), 1999 (1088 runs), 2001 (1003 runs) and 1997 (1000 runs).[6] Gavaskar is the only other Indian with four seasons of 1000+ runs
58. He is second most number of seasons with over 1000 runs in world.
59. On 3 January 2007 Sachin Tendulkar (5751) edged past Brian Lara's (5736) world record of runs scored in Tests away from home
60. Tendulkar and Brian Lara are the fastest to score 10,000 runs in Test cricket history. Both of them achieved this in 195 innings
61. Second Indian after Sunil Gavaskar to make over 10,000 runs in Test matches
62. Became the first Indian to surpass the 11,000 Test run mark and the third International player behind Allan Border and Brian Lara.
63. Tendulkar is fourth on the list of players with most Test caps. Steve Waugh (168 Tests), Allan Border (158 Tests), Shane Warne (145 Tests) have appeared in more games than Tendulkar
64. Tendulkar has played the most number of Test Matches(144) for India (Kapil Dev is second with 131 Test appearances) .
65. First to 25,000 international runs
66. Tendulkar's 25,016 runs in international cricket include 14,537 runs in ODI's, 10,469 Tests runs and 10 runs in the lone Twenty20 that India has played.
67. On December 10, 2005, Tendulkar made his 35th century in Tests at Delhi against Sri Lanka. He surpassed Sunil Gavaskar's record of 34 centuries to become the man with the most number of hundreds in Test cricket.
68. Tendulkar is the only player who has 150 wkts and more than 15000 runs in ODI
69. Tendulkar is the only player who has 40 wkts and more than 11000 runs in Tests
70. Only batsman to have 100 hundreds in the first class cricket.