Wednesday, May 31, 2006

இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி

சில நாட்களுக்கு முன் தற்செயலாய், வேகமாய் சேனல் மாற்றும் பொழுது, ஒரு கணம் பொதிகையை கடந்தேன். அட தெரிந்த முகம் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். நம்ம நித்யஸ்ரீ மகாதேவன். தன் பாட்டி பட்டம்மாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பாட்டியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சில பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். வாழ மீனை கேட்கும் இடையில், இதையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் அந்தப் பேட்டியையும், பேத்தியையும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

விளம்பரங்களுக்கு நடுவே ஓடும் கள்ள உறவு + அழுகை மெகா தொடர்கள், "வண்கம்" தங்கிலீஷ் காம்பியர்கள், "நகைச்சுவை" செய்திகள்(?), சினேகாவுடன் உங்கள் சாய்ஸ், "வக்கிரமான jokes"-வுடன் லொள்ளு சபா, "சும்மா இருக்காத, அம்மா தான் எல்லாம்" என்ற டயலாக்கைக் கூட mute செய்த சன் டி.வி. கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் இறைச்சலில் நாம் ரொம்ப miss பண்ணின வகையராக்களில் இருந்தது அந்த நிகழ்ச்சி. பேட்டி கொடுத்த அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். ஒரு குழந்தையாய் மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ நம் சொந்த பாட்டியைடம் பேசிக் கொண்டிருந்ததை போன்ற ஒரு உணர்வு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பார்க்க முடிவதில்லை. காரணம், எந்த நிகழ்ச்சியும் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பொதிகை சேனல் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது (ஏன் ஓடாது?). அவர்களுக்கென்ன, அரசாங்கம் பார்த்துக் கொள்கிறது. பொதிகை லாபம் ஈட்டினால் என்ன? நட்டம் ஈட்டினால் என்ன? மாதச் சம்பளம் வந்துவிடுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தது. பொதிகையில் இன்றும் தற்செயலாய் கண்டது. +2 தவறியவர்கள் தற்கொலை கூடாது என்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வழங்கியவர் கிரீஷ் கர்னாட். இதனை மற்ற எந்த சேனலும் செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியது TRP ratings, அவ்வளவே. கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் பொதிகையை tune செய்கிறோம். மற்ற நேரத்தில்?

இது பொதிகை-யோடு நின்றுவிடுவதில்லை. அரசாங்கத்தின் எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். எத்தனை தனியார் பேருந்துகள் கிராமத்திற்கு போகின்றன? பேருந்தே நுழைய முடியாத கிராமத்தில் கூட அரசாங்க பேருந்துகள் நட்டத்திற்கு போய் வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் நிலைமை என்ன? லாபம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தின் permit விலை மட்டுமே கோடியை தாண்டும். எங்கள் ஊரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், கொண்டு சேர்க்கும் வேகம். ஆனால், உண்மை அதுவல்ல. திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா பின் வேலூர் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரை மிக வேகமாம சென்று, சில நிமிடங்களுக்கு வாணியம்பாடியில் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். அதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு வேகமாக சென்று, பின் ஆம்பூரில் 15-25 நிமிடம் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். ஆனால், மக்கள் அந்த பேருந்துகள் தான் வேகமாக சேர்க்கிறான் என்று கூட்டம் கூடும். இங்கே பொதுமக்கள் உயிர் தான் பணயம் வைக்கப்படுகிறது. (ஒரு முறை சென்று பார்த்தால் இதை உணரலாம்).

நான் ஒரு BSNL எண் வைத்துள்ளேன். பெங்களூரில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டு நகரமெங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. Caller tunes-க்காக சும்மா சும்மா குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்யும் தனியார் செல் நிறுவனங்கள் அன்று எங்கே போயிருந்தன? அலுவலகத்தில் எனக்கொரு கைபேசி கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த BSNL எண்ணை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செலவானாலும் அந்த எண்-ஐ அப்படியே வைத்து, இரண்டு கைபேசியையும் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நாமெல்லாம் என்ன செய்கிறோம். தனியார் பேருந்துகள் சினிமா போடுகிறான் என்று அந்த வண்டியில் தானே ஏறுகிறோம்? அரசாங்க சேவை என்றாலே அது கிராமத்து மக்களுக்கு என்றல்லவா நினைக்கிறோம். தனியார் நிறுவனங்களின் சேவை என்றால் ஓடிப்போய் வாங்குகிறோம். நமக்காக இருக்கும் அரசாங்க பொருட்களையும் உபயோகிப்போமே? எத்தனை பேர் காதி வஸ்திராலயத்தில் வாங்குகிறோம்? அல்லது, Cooptex-ல் துணி எடுக்கிறோம். மற்ற கடைகளில் 10 துணிகள் வாங்கினால், Cooptex-ல் ஒன்றாவது வாங்குவோமே. அந்த கைத்தரியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கும்.

நம் அரசாங்கம் அளிக்கும் சேவைகளில் பல குறைகள் இருக்கின்றன. சேவைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். அதை படிப்படியாக மாற்றவேண்டுமே தவிற தவிர்க்க கூடாது. ஒரு பேச்சுக்கு, சென்னையின் தெருக்களில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள். திருச்சியில் தனியார் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. அங்கே இருக்கும் போட்டியில், மக்களில் உயிர் பணயம் வைக்கப்படுகின்றது. வாகனங்கள் தறிகெட்டுப் ஓடுகின்றன. இந்த நிலை தான் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் நிகழும். வெறும் வியாபார நோக்கம் மட்டுமே அங்கு முன்னிறுத்தப்படும். மக்கள் சேவை பின்னிறுத்தப்படும்.

ஒரு நாள் மட்டும் எல்லா சேனல்களையும் நிறுத்தி அனைவரும் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கொண்டு வந்தால் தெரியும் நம் அரசாங்கத்தைப் பற்றி.

Tuesday, May 30, 2006

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!???

எனக்கு கொஞ்ச நாளாவே ஒன்னு நடக்குது. அத அப்படி பகிர்ந்துக்கிறதுன்னு தெரியல. இருந்தாலும் சொல்லிபுடுறேன்.

நான் கையில் கடிகாரம் கட்டும் வழக்கம் இல்லாதவன். கையில் இருக்கும் கைபேசி-ல் (கரீகிட்டு தானே?) Screen Saver வைத்து மணியைப் பார்த்துக் கொள்வேன். எல்லாமே நல்லா தான் போய்ட்டிருக்கு. ஆனால், ஒரு 2-3 மாதங்களாகவே நான் நேரம் பார்க்கும் நேரத்தில் தான் பிரச்சினையே. அதாவது, நான் நேரம் பார்க்கும் பொழுதெல்லாம் நான் காணும் நேரம் "பெரும்பாலும்" magic numbers-ஆகவே உள்ளது. இதோ இப்பொழுது எழுதும் வரை.

உதா, 12:00, 02:00 etc. அதுவும் சில சமயம் 11:33, 12:12 இப்படியெல்லாம் நேரம் தெரிகிறது (அல்லது, அந்த நேரத்தில் நான் பார்க்கிறேன்). இது எப்பொழுதாவது ஒருமுறை என்றால் பரவாயில்லை. ஆனால், நான் நேரம் பார்க்கும் சமயங்களில் பெரும்பாலும் (65-75%) இப்படித்தான் தெரிகிறது. ஒரு சில சமயங்களில் 11:11, 09:09 கூட காட்டும். இத வெளியில் சொல்ல முடியல. காரணம், இது ஒரு வித்தியாசமான பிரச்சினையா(!) இருக்கு. நானும் probability எல்லாம் யோசிச்சு பாத்துட்டேன். ம்ஹூம், ஒன்னும் பயனில்லை. சரி! atleast இத பகிர்ந்துக்கலாமேன்னு தான் இந்தப் பதிவு. (ஒரே குஷ்டமப்பா...இது கஷ்டமப்பா).

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!??? யாருக்காவது தெரியுமா? (என்ன சொல்லி நான் எழுத?)

Friday, May 26, 2006

மதுமிதா. ஆமா! என்னய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?



வலைப்பதிவர் பெயர்: சீனு

வலைப்பூ பெயர் : கோழி கிறுக்கல், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்

சுட்டி(url) : http://jeeno.blogspot.com, http://sirippu.blogspot.com

ஊர்: திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சிவா

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல், 30, 2004 - வெள்ளிக்கிழமை - ஒரு சுபயோக சுபதினத்தில் (அல்ல என்று நினைக்கிறேன்)

இது எத்தனையாவது பதிவு: 43

இப்பதிவின் சுட்டி(url): http://jeeno.blogspot.com/2006/05/blog-post_114864490405041429.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ். கடைசியாக கல்லூரி பரீட்சையில் எழுதியது. வேறு எங்கேயும் தமிழை காணவில்லை. சரி! அப்புறம் தமிழே மறந்திடும்னு நினைச்சப்போ, சிவா சொல்லி இந்த தளம் தெரிந்தது.

சந்தித்த அனுபவங்கள்: நான் பெரும்பாலும் நல்ல விசயம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பித்தேன்.

பெற்ற நண்பர்கள்: பெரும்பாலும் முகமற்ற நண்பர்கள்.

கற்றவை: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அது படிக்கிறவர் தலையெழுத்து ;) (ஆனால், நாகரீகமாக எழுதவேண்டும் என்பது எனக்கு நானே போட்டுக் கொண்ட வேலி!)

இனி செய்ய நினைப்பவை: தினமும் நான் காண்பவையையும், கேட்பவையையும், தெரிந்ததையும், அறிந்ததையும் கிறுக்கவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "This Glass Is Half Full"-ன்னு நினைக்கிற பார்ட்டி. இப்போதைக்கு நாத்திகவாதி. அப்படியே இருப்பேன் என்று நம்புறேன். நகைச்சுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னைச்சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
இந்த அறிவியல் அளித்திருக்கும் இந்த இணையத்தை ஆக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். தேவையில்லாமல், தனி மனித துவேசங்களும், சாதி மதத் தூற்றல்களும் தான் இருக்கின்றன. Of course, கலகம் பிறந்தால தான் நியாயம் கிடைக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால், இங்கே தான் தமிழனின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எரியவேண்டும். (அட! நீங்க கேட்டப்புறம் தான் என்னைப்பற்றி ஒரு முறை யோசிக்க நேரமும், காலமும் கிடைத்தது. நன்றி!!). Life is Once! Live it...Peacefully!!

Tuesday, May 23, 2006

சென்னையில் சினிமா

சென்னையைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டாயிற்று. அதிலே, சென்னையில் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைத்திருந்தேன்.
சென்னை தென்னிந்தியாவின் தலைநகரம் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவின் தலைநகரமும் கூட. இதுக்கு முக்கியமாக இந்தியை உள்ளே விடாததும் ஒரு காரணம்னு "நான்" நினைக்கிறேன். இதை விட முக்கியமான காரணம், சினிமாவை அதீதமாக நேசிக்கும் மக்கள். அதனால் தான் தமிழகத்துக்கு ஐந்து முதல்வர்களை (அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா) தமிழ் சினிமா உலகில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறோம். அப்புறம் விஜயகாந்த் கிளம்பியிருக்கிறார். (இதில் அண்ணாவும், கலைஞரும் சினிமாவினால் புகழடைந்தவர்களில்லை. பொதுவாழ்விற்கு வந்து பின் சினிமாவில் கால்பதித்தவர்கள்).
சரி! விசயத்திற்கு வருகிறேன். சென்னையில் சினிமா பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். சினிமாவை (மற்றும் கிரிக்கெட்டை) நுட்பமாக ரசிப்பதில் சென்னை ரசிகர்கள் ஒரு படி மேலே தான். பெங்களூரில் பல படங்களை, தேமே என்று அரங்கத்தில் ஒரு சலணமும் இல்லாமல் பார்த்திருக்கிறேன். சென்னை சினிமா அரங்குகளை மூன்று விதமாக பிரிக்கலாம், A, B, C என்று. இவை ரசிகர்கள் மற்றும் cost பொருத்து. A என்றால், சத்யம் வளாகம், மாயாஜால், அபிராமி போன்றவை. நான் பெரும்பாலும் போவது / விரும்புவது B தான் (சத்யம்-ல் தேவையான படத்திற்கு டிக்கட் கிடைப்பதில்லை). B என்றால் தேவி வளாகம், ஆல்பர்ட் / பேபி ஆல்பர்ட், உட்லாண்ட்ஸ் / உட்லாண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி, உதயம் வளாகம் போன்றவை. பெரும்பாலும் போவது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றில் உள்ள அரங்குகளுக்கு தான்.
தேவிக்கு சென்றால், பெரும்பாலும் டிக்கெட் கறுப்பில் தான் (கலர் அல்ல) கிடைக்கும். "பட்டியல்" படத்திற்கு முதல் நாள் சென்றேன். 50ரூ டிக்கட் 150ரூ என்றார். அந்த 150 ரூபாயை அப்படியே எடுத்து சென்று ஆயிரம் விளக்கில் உள்ள சரவணபவனில் சென்று 1 தட்டு இட்லி, 1 தோசை மற்றும் ஒரு காபிக்கு (மட்டும் 22.50/-) கொடுத்தேன். (இதுக்கு பேசாம படத்துக்கே போயிருக்கலாமோ???). நான்/நாங்கள் தேவியில் பார்த்த பல படங்களுக்கு கறுப்பில் தான் டிக்கட். அப்புறம் பார்க்கிங் தொல்லை. இரண்டு சக்கர வாகனங்களுக்கு 10ரூ அழ வேண்டும் (சத்யமிலும் தான்). ஒழுங்காக நிறுத்த வில்லை என்றால், அங்கிருக்கும் organiser-க்கு கோபம் வரும். "சார்! ஓரமா தான் நிருத்துங்களேன். இப்படி நிறுத்துனா எப்படி?" என்று கடுகடுப்பார். (அப்புறம் அவர் எதற்கு?). இதே காட்சி தான் பெரும்பாலான B அரங்குகளில். ஒரு வழியாக இருப்பிடம் தேடிப் பிடித்து செட்டில் ஆவோம்.
இது போன்ற படங்களுக்கு, அதுவும் வார இறுதியில், வருவது பெரும்பாலும் இளைஞர்கள். அதுவும் இரவுக் காட்சி என்றால் கேட்கவே வேண்டாம். படத்தில் நல்ல காட்சிகள் வந்தால் கட்டாயம் கைத்தட்டல்கள் கிடைக்கும். சில நேரங்களில் நக்கலுடன். "ராம்" படத்திற்கு சென்ற பொழுது, ஆல்பர்ட்-ல், படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பின்னனி இசைக்கு எழுந்த கைத்தட்டல்கள். அதே போல சத்யம்-ல் "Narnia" போயிருந்தேன். படம் பேர் போடும் பொழுது ஒரு மரங்களடர்ந்த பகுதியில் இரயில் போகும். அப்பொழுது காமெரா கூடவே Top angle-ல் பயனிக்கும். அந்த ஒளிப்பதிவும், காமெரா கோனமும், பின்னனி இசையும் பரவசமூட்டுவதாக இருந்தது. அந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு "ஓ" போடனும் போல இருந்தது. நான் நினைத்த அதே நேரத்தில் அந்த காட்சிக்கு ஒரே கைத்தட்டல்.
ஒரு சனி இரவு, தேவி வாசலில், எந்த படத்திற்கு போகலாம் என்று நின்றுகொண்டிருந்தோம். எங்களைப் போலவே இன்னொரு குழுவும். எல்லா படமும் புதுசு. எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம். "எந்த படத்தையும் நம்ப முடியாது. 'அறிந்தும் அறியாமலும்' போகலாம். Atleast, படம் நல்லா இல்லேன்னாலும் music ஆவது நல்லா இருக்கும்" என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சரின்னு நாங்களும் அதே படத்துக்கு போனோம். நல்ல வேளை, எதிர்பார்த்த மாதிரியே படமும் நன்றாக இருந்தது. உட்லாண்ட்ஸ்-ல் 'கள்வனின் காதலி'. படத்தின் இறுதியில் அந்த படத்தின் இயக்குனர் தமிழ்வாணன் (மொதல்ல பேர மாத்துங்க, மானம் போகுது) வந்து தமிழ் கலாசாரத்தின் பெருமைகளை (யாரு சொல்லுறதுன்னு வெவஸ்தை இல்லாமல்) சொல்லுவார். அந்தக் காட்சிக்கு அரங்கில் ஒரே நக்கல் சிரிப்பு. இதில் விசேடம் என்னவென்றால், அனைவரும் ஒரே அலைவரிசையில் இருப்பது தான். அதே உட்லாண்ட்ஸ்-ல் ஒரு முறை Time Killing attitude-லேயே 'கணா கண்டேன்' சென்றோம். அதை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கே.வி.ஆனந்த் தான் இயக்குனர் + ஒளிப்பதிவாளர் என்று. அங்கே வந்த ஒருவர் எங்களிடம், தானும் கே.வி.ஆனந்த்-ன் ஒளிப்பதிவிற்காக தான் அந்த படம் பார்க்க வந்ததாக கூறினார். (ஆனால், இந்த படத்தின் ஒளிப்பதிவாளார், கே.வி.ஆனந்த்-ன் உதவியாளராக இருந்த செளந்தரராஜன் என்பவர்). இதே போல, பல technical விசயங்களையும் அறிந்தவர்கள் சென்னை ரசிகர்கள். இதை நானே கேட்டிருக்கிறேன். "அகிலா கிரேன்", "அந்நியன்-ல் time-freeze கேமரா" போன்றவற்றை பற்றி அலசுபவர்களை பார்க்கலாம்.
ஒரு படம் பார்க்கும் பொழுது, அதை ரசிப்பதற்கு சுற்றி இருக்கும் ரசிகர்களும் ஒரு முக்கியமான காரணம். இதை நான் உணர்ந்தது "மும்பை எக்ஸ்பிரஸ்" பார்க்கும் பொழுது. நான் பார்த்தது சத்யம்-ல். 50ரூ டிக்கட் 100ரூ. கோடை விடுமுறை. குடும்பத்துடன், மற்றும் சிறுவர்கள் கணிசமாக இருந்தனர். சாதாரணமாக ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் சிரிப்பது, எனக்கும் சிரிப்பை வரவழைத்தது. இந்த படத்தை, வேறொரு சூழலில் பார்த்தால், கண்டிப்பாக அறுவையாக தான் இருந்திருக்கும். ஆனால், "மும்பை எக்ஸ்பிரஸ்"-ஐ அந்த சூழலில் பார்த்ததால், எனக்கு அது ஒரு அருமையான நகைச்சுவைப் படமாகத் தெரிந்தது (இப்போதும் தான்). ஆனால், மற்றவர்கள் அதை சுலபமாக அறுவை என்று சொல்லிவிடுவார்கள். அதனால் தான், திருட்டு VCD-ல் பார்ப்பவர்கள் அந்தப் படங்களின் originality-ஐ இழக்கிறார்கள். இப்படி technical-ஆக நன்றாக கொடுத்தாலே திருட்டு VCD-ஐ கட்டுக்குள் கொண்டு வரலாம்.

Tuesday, May 16, 2006

உதிரிப்பூக்கள், அறுவடை நாள்

சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள். "உதிரிப்பூக்கள்" மற்றும் "அறுவடை நாள்". இரண்டுமே இளையராஜா இசையமைத்த படங்கள். இந்த இடுகை அந்த இரு படங்களின் தலைப்பைப் (Title) பற்றி. முதலில் கதையை பார்ப்போம். அப்பொழுதுதான் இந்த தலைப்புக்கள் அந்தப் படங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது எனத் தெரியும்.
1) உதிரிப்பூக்கள்
இது மகேந்திரனின் வெற்றிப் படைப்புகளில், மற்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில், மிக முக்கியமான இடம் பெற்ற படம். 1977-ல் வெளிவந்து 175 நாட்களைக் கடந்து, அதை விட முக்கியமாக, பல பாராட்டுக்களைப் பெற்ற படம். இந்தப் படத்தில் ஊர் பெரிய மனிதர் விஜயன். அவர் மனைவி அசுவினி, இரண்டு குழந்தைகள் அஞ்சு, ஹாஜா ஷெரீப், தங்கை செண்பகம், தந்தை சாருஹாசன். கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர் அசுவினி. விஜயனின் தம்பி பூபதியே அண்ணனுக்கு எதிரானவன். மைத்துனியின் மேல் மோகங் கொண்டு நோய்வாய்ப்பட்ட அஸ்வினியையும், மாமனாரையும் மிரட்டுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் அசுவினியும் இறந்து விடுகிறாள். சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செண்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்கு முந்தைய தினம், அக்காவின் குழந்தைகளை தானே வளர்க்க அனுமதி கேட்க, சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது (அதற்கு முன்னர் தான் கல்யாண மாப்பிள்ளை சுந்தரவடிவேலுவிற்கு பத்திரிக்கை வைத்து, கல்யாணத்திற்கு வரவேண்டாமென்றும், பள்ளியில் நடந்த தில்லு முள்ளுகளுக்காக சுந்தரவடிவேலுவை காவல்துறை கூடியவிரைவில் கைது செய்யும் என்றும் மிரட்டிவிட்டு செல்கிறார்), சுந்தரவடிவேலு அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். அவர் (இரண்டாவது) மனைவியும் வீட்டை விட்டு போய்விடுகிறாள். கொதித்து எழும் ஊர்மக்கள், அவருக்கு தண்டனையாக அவரே ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், சுந்தரவடிவேலு திருந்தியவராய் "உங்க எல்லோரையும் கடைசியில் நான் என்னைப் போல ஆக்கிட்டேன். அது தான் நான் செஞ்சதிலேயே பெரிய தவறு." என்று கூறி, குழந்தைகளை அழைத்து, "நல்லா படிக்கனும். அப்பா குளிக்கப் போறேன்" என்று கூறி ஆற்றில் இறங்குகிறார். (இங்கே அனைவரின் முகபாவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது). பின், அனைவரும் சென்றுவிடுகின்றனர். அந்த இரு குழந்தைகள் மட்டும் அப்பா எப்போ வருவார் என்று அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து போகும். ஹாஜா ஷெரீப் அஞ்சுவின் கைகளைப் பிடித்து அழைத்து நடந்து செல்வதாக காட்சி உறையப்பட்டு (freeze) உதிரிப்பூக்கள் என்று title காட்டப்படும். அந்த குழந்தைகள் தான் உதிரிப்பூக்கள். எந்த மாலையிலும் சேராமல், பூசைக்கும் உதவாமல் கிடக்கும் பூக்கள்.
எவ்வளவு அழகான தலைப்பு. படத்திற்கும் கதைக்காகவும் இதை விட சிறந்த தலைப்பு இருக்க முடியுமா? தெரியவில்லை.
பசியுடன் இருக்கும் அஞ்சுவை அழைத்துக் கொண்டு செண்பகம் வீட்டிற்கு செல்லும் ஹாஜா ஷெரீப் "இவளுக்கு பசிக்குதாம்" என்று சொல்லும் பொழுது, கள்ளம் கபடம் இல்லாமல் ஈறுகள் தெரிய சிரிக்கும் அஞ்சு;
தாய் இறப்பது கூட தெரியாமல் அவளின் வளையலை இழுத்து விளையாடும் காட்சி;
"நீங்க மனுஷனே இல்ல", "பரவாயில்ல", "இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகனும்", "பாக்கலாம்" - விஜயன்;
படத்தின் ஆரம்பத்தில் வரும் "எஸ் சார்!";
- ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
2) அறுவடை நாள்
இந்த படத்தை சுமார் 8 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தது. அப்பொழுதே ரசித்திருக்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தை ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். அட, நல்ல படமாயிற்றே என்று உட்கார்ந்து (சரி! படுத்துகிட்டே) பார்த்தேன். இயக்கம்: G.M. குமார். கதை பழைய கதை தான். ஆனால் கதைக்களமும், திரைக்கதையும் அருமை.
கதைக்களம்: ஒரு கிராமம், ஒரு தேவாலையம், ஊர் பணக்காரர் (அரண்மனை), பிரபு, பல்லவி, ராம்குமார், இந்திரா, வடிவுக்கரசி, முக்கியமாக இளையராசா. படம் flashback-ல் போகிறது. பிரபுவின் தாயார் வடிவுக்கரசியின் பார்வையில் படம் செல்கிறது. இதிலும்(!), ஊர்ப் பெரியவர் அரண்மனை (பெயர் மறந்துவிட்டது), அவர் மகன் பிரபு, வெகுளி. அதட்டி மிரட்டி வளார்க்கப்படுகிறார். ஊருக்கு மருத்துவராக வரும் பல்லவி. ராம்குமார் அந்த ஊரில் இருக்கும் தேவாலய பாதிரியார். பல்லவிக்கு கன்னியாஸ்திரியாக விருப்பம். பிரபுவுக்கும் பல்லவிக்கும் காதல் மலர்கிறது. பல்லவி பிரபுவை காதலிப்பதையே ராம்குமாரும் விரும்புகிறார். இதை கேள்விப்பட்டு அரண்மனை பிரபுவுக்கும் தன் அக்கா மகள் இந்திரா-வை (அல்லது அவர் சகோதரி ராசி? இருவரில் யார் என்று தெரியவில்லை) மணமுடிக்க விழைகிறார் (பால்ய விவாகம்). இதை கேள்விப்பட்டு பல்லவியை அழைத்துக் கொண்டு நேரே எல்லோர் எதிரிலும் பிரபு தான் பல்லவியை விரும்புவதாக கூறுகிறார். அரண்மனை இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, சம்பந்தம் பேச பெரியவர்கள் யாரையாவாது வந்து பேச சொல்கிறார். பல்லவி இதற்காக ஊருக்குச் செல்லும் இடையில் இந்திராவின் நீராட்டு விழாவில், மாலையில் தாலியை மறைத்து வைத்து மாலையிடச் செய்து திருமணம் செய்வித்துவிடுகிறார். உண்மையில் இது பொம்மைக் கல்யாணம். இந்திரா இன்னும் சிறுமி தான். ஊரை ஏமாற்றி அரண்மனை இந்த கல்யாணாத்தை நடத்துகிறார். பல்லவி திரும்பி சம்பந்தம் பேச வர, உண்மையை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறார். (TR ஸ்டைல்ல படிக்கவும்: இங்க தான் சார் "தேவனின் கோயில்" பாட்ட ராசா வைக்கிறார்). இந்த காதலுக்கு உதவி செய்ததற்காக பாதிரியாரை சபையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். ஊர் பஞ்சாயத்து அந்த கல்யாணம் செல்லாது என்று அறிவிக்கிறது (அட! நல்ல பஞ்சாயத்து சினிமாவில் மட்டுமே சாத்தியம்). வடிவுக்கரசி கேட்டுக் கொள்ள ஊரை விட்டு போக முடிவெடுக்கிறார் பல்லவி. ராம்குமார் இந்திராவின் வேண்டுகோளுக்கிணங்க பிரபுவுக்கும் பல்லவிக்கும் திருமண ஏற்பாட்டினை செய்கிறார். அரண்மனை ஆட்களை அனுப்பி ராம்குமாரை சிலுவையில் அறைந்து கொல்கிறார். பல்லவி இருக்கும் வீட்டிற்கு தீ வைக்கின்றனர் (உள்ளே இந்திராவும் இருப்பது தெரியாமல்). இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்கிறார்.
அறுவடை நாள். நிலத்தில் அறுவடைக்கு உள்ளூர் கூலியாட்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் அரண்மனையே வயலில் இறங்குகிறார். கையில் கதிரருக்கும் அரிவாள். பிரபு கோபத்துடன் அங்கே வந்து சேர அரண்மனை பிரபுவிடம் அரிவாளை கொடுத்து ஒத்தாசை செய்ய சொல்கிறார். அப்படியே சிலையக நிற்கும் பிரபுவைப் ஏளனமாக பார்த்து, "எரிஞ்சு போனவளா நெனச்சு கரையிரீகளோ" எனக் கேட்க, பிரபு கையில் இருக்கும் அரிவாளால் தந்தையை வெட்டிச் சாய்க்கிறார். அறுக்கப்பட வேண்டிய கதிரில் இரத்தம் தெரிக்கிறது.
Flashback முடிய, பிரபு விடுதலையாகிறார். இந்திரா சிறைச்சாலையின் வெளியே காத்திருக்கிறார். கையில் ஒரு கடிதம். "அம்மா வரலியா?" என்ற பிரபுவின் கேள்விக்கு கடிதத்தை நீட்டுகிறார் இந்திரா. வடிவுக்கரசி பிரபுவிற்கு எழுதியது. "என் தாலியை தான் நீ மதிக்கவில்லை. கட்டிய இவளின் (இந்திரா) தாலியையாவது மதிச்சு வாழ்க்கை கொடு" என எழுதியிருக்கிறார். இந்திராவை அழைத்துக் கொண்டு பிரபு செல்வதாக படம் முடிகிறது.
"அப்பா அம்மா இல்லாத பொன்னுன்னு சொன்னாங்க. ஆனா, அது என்ன J.நிர்மலா?" "அது Jesus நிர்மலா father";
"தேவனின் கோயில்" பாடல். கேட்டால் கரைத்துவிடும் பாடல். "கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா?";
அரண்மனையின் மகன் தான் பிரபு என்று தெரியாமல், பிரபுவைப் பற்றி புகார் கொடுக்க, விடிய விடிய பிரபுவை முட்டி போடச் சொல்லும் இடம். பிரபு நகைச்சுவையில் கலக்கியிருப்பார்;
இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லும் காட்சி.
- ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
இந்த இரண்டு படங்களுக்கும் பொருத்தமே இந்த பொருத்தமான தலைப்பு தான். இன்றைய சினிமாக்களுக்கு வைக்கும் தலைப்பு பிரச்சினைகளை எழுப்ப, இப்படி கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்திருக்கும் இந்த இயக்குனர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உதிரிப்பூக்களைப்போல இதற்கும் அருமையான தலைப்பு. "உதிரிப்பூக்கள்" CD-யை ராஜ் வீடியோ விஷன்-ல் வாங்கி பத்திரப்படுத்திவிட்டேன். அடுத்து, "அறுவடை நாள்"-ஐ அறுவடை செய்ய வேண்டும்.
இவை இரண்டும், miss பண்ணக்கூடாத படங்கள்.

Thursday, May 11, 2006

சென்னையும், நானும்

சென்னை. தென்னிந்தியாவின் தலைநகரம். ஒரு தலைநகரத்திற்கே உரிய எல்லா வித அம்சங்களும், நல்லதும் கெட்டதும், உள்ளடக்கிய ஒரு நகரம். சென்னையைப் பற்றிய என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு.

சென்னையைப் பற்றி இங்கே நான் பதிவு செய்ய பல விசயங்கள் இருக்கிறது. இதற்கு முன் சுமார் 14 மாதங்கள் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின், சென்னையில் வேலை கிடைத்தவுடன், நான் மாற்றலாகி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது "சென்னை" என்ற மூன்றெழுத்து. பெங்களூரில் வாழ்க்கை நல்ல விதமாக போய்க்கொண்டிருந்தாலும், சென்னையை நோக்கிய எனது பயணம் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் இருந்தது. (அந்த எதிர்பார்ப்பெல்லாம் பொய்த்துப் போனது வேறு விசயம்). சாதாரண பயணம் அல்ல. சென்னையை ஆழிப்பேரலை தாக்கிய மூன்றாவது (29-12-2004) நாள் சென்னையில் கால் பதித்தேன் (மனதில் ஒரு வித நடுக்கலுடன்). அதுவும் பெங்களூரில் இரவு அலுவல் முடிந்து நேரே 10:30-க்கு பேருந்து. கடன் வாங்கி பேருந்து சீட்டு எடுத்து, சென்னையின் எல்லையான திருபெரும்புதூர் அருகே வரும்போது, பேருந்து break down ஆகி, மேலும் ஒரு மணிநேர தாமதம். தியாகராய நகரில் இறங்கி, திருவல்லிக்கேணிக்கு ஆட்டோ பிடிப்பதற்குள் நாக்கு தள்ளியது. ஒருவழியாக காலை 7:30-க்கு திருவல்லிக்கேணி அடைந்தேன். ஒரே புழுக்கம். அட, ஏண்டா பெங்களூரை விட்டு வந்தோம்ன்னு அப்பொழுது யோசித்தேன். முதல் நாள் வேலைக்குப் போய் வீட்டிற்கு திரும்பியவுடன் கடற்கரைக்கு சென்றேன். அந்த பரந்த மெரீனா கடற்கரையில் தண்ணீருக்கும், சாலைக்கும் நடுவில் சில நிமிடங்கள் நின்றேன், தன்னந்தனியாக. அன்று தான் அந்த கடற்கரையில் ஆளாரவமற்று இருப்பதை பார்த்தேன். என்னைச் சுற்றி கடற்கரையில் என்னைத் தவிற ஒரு உயிர் கூட இல்லை. மேலும், தண்ணீரில் நனைந்த மணலும், ஒரு வித துற்நாற்றத்தை பரப்பி உடலில் ஒரு வித நடுக்கத்தைக் கொடுத்தது. அலையை நோக்கி நடக்க மனது முயன்றாலும், கால் சாலையை நோக்கி நடந்தது. அங்கே 100 மீட்டர் கூட 100 கிலோமீட்டராக தெரிந்தது. ஒருவித கனத்த + பயந்த இதயத்துடன் சாலைக்கு வந்தேன். மனதில் சோகம் உள்ள போது, அந்த கடற்கரையில் அமர்ந்து அலைகளை ரசிப்பதும் ஒரு வித தியானமே. மனது லேசாகும்.

பின், ஓரிரு நாள் வாழ்க்கை சென்னையை வெறுக்க வைத்தது. அலுவல் வேலை முறையில், டிசம்பரிலும் அடிக்கும் வெய்யில், அசுத்தமான ஊர் இப்படி. நாகேஷ் ஒரு படத்தில் இப்படி சொல்வார்.

"முதல் 6 மாசத்துக்கு கஷ்டம் தான்"
"அப்புறம்"
"அப்புறமென்ன அதுவே பழகிடும்"

அதே போல் தான் எனக்கும். பிறகு சென்னையில் இருக்கும் பல நல்ல விசயங்கள். முக்கியமாக, ஒரு bachelor-ஆக, எனக்கு சொர்க்கமாக தெரிந்தது, திருவல்லிக்கேணி. பெங்களூரில் இல்லாத ஒன்று சென்னையில் கிடைக்கிறது என்றால், அது ருசியான உணவு. பெங்களூரில் எங்கும் நல்ல தண்ணீர் கிடைக்கும், ஆனால் ருசியான உணவு கிடைக்காது. சென்னையில் எங்கும், எப்போதும் ருசியான உணவு கிடைக்கும், அது இரவு மணி இரண்டு ஆனாலும். இங்கே "ருசியான" என்றால் நம்ம ஊர் சாப்பாடு என்று பொருள். தேவி முதல் சத்யம் வரை திரையரங்குகள் மிக அருகில். அறையைச் சுற்றிலும் அருமையான மெஸ். பக்கத்திலேயே கடற்கரை. ஊருக்கு செல்லவேண்டுமானால், 10 நிமிடத்தில் மத்திய இரயில் நிலையம். சுமார் ஒரு மணி நேரப் பயனத்தில் மகாபல்லிபுரம், அல்லது சென்னையிலேயே பல பொழுதுபோக்கு இடங்கள். இவையாவும் பெங்களூரில் எனக்கு கிடைக்காதது, climate தவிற.

சென்னையின் +, - கலவை:

* சென்னையில் ஐந்து ரூபாய் இருப்பவரும் வயிறார சாப்பிடலாம், ஐம்பது ரூபாய் இருப்பவரும் வயிறார சாப்பிடலாம்.
* மக்கள் தொகை அதிகம். அதிலும் வறுமை கோட்டை தாண்டமுடியாமல் தடுக்கி விழும் மக்கள் அதிகம் உள்ள ஒரு நகரம். முதலில் உணவுக்கே திண்டாடும் நகரம். அதனால், சுத்தமும் சுகாதாரமும் அடுத்த பிரச்சினை. இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவிக்காக 42 பேர் மாண்ட கோரமும் உண்டு. பேய் மழையில் மிதந்து வந்த குழந்தையை பயங்கர ரிஸ்க் எடுத்து காப்பாற்றிய நீர நெஞ்சங்களும் உண்டு.
* பழமையை மிகவும் போற்றிப் பாதுகாக்கும் நகரம். இப்பொழுதும் காலையில் இட்லி, தோசை முடித்த பிறகு டபரா செட் காப்பியை ரசித்து பருகும் நகரம். உதாரணமாக, ரத்னா கபே அல்லது சரவணபவனுக்கு சென்று பாருங்கள்.
* பேருந்து பயணம் மிக கொடுமையான ஒன்று. எங்கும் (ரிப்பேராகி) நில்லும் பழைய பராமரிக்கப்படாத பேருந்துகள். பயணச்சீட்டின் விலை மற்ற நகரங்களை விட சற்று குறைவு.
* மாநகர இரயில் பயணம் ஒரு சுகமான அனுபவம். இரயிலில் பாடும் பிச்சைக்காரர்களுக்கு ரசிகர் மன்றமே வைக்கலாம். (இவர்களை பிச்சைகாரர்கள் என்று சொல்வதே தவறு. இவர்களும் உழைப்பாளர்கள் தாம்).
* அலுவல் நேரங்களில் மேற்கூறிய இரண்டு வழியில் பயணம் செய்தாலும், கசங்கி பிழியப்படும் சாத்தியமே உண்டு.
* பெங்களூருக்கும், சென்னைக்கும் work atmosphere-ல் உள்ள மலைக்க வைக்கும் மாற்றம்.
* சென்ற முறை அடித்த பேய் மழையில் சுத்தமான கூவம், பின் இரண்டே வாரத்தில் பழைய நிலைக்குத் திரும்பியது, பயங்கர துற்நாற்றத்துடன்.
* Cost of living குறைவானது மற்ற பெரு நகரங்களை பார்க்கும் பொழுது.
* தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் (இதைப் பற்றி தனியாக பதிவு போடுகிறேன்). அழகியும் உதிரிப்பூக்களும் ஓடும். கில்லியும் ஓடும். C U @ 9-ம் 175 நாள் ஓடும்.
* பொதுவாகவே சற்றே அமைதியான நகரம் (நிச்சயமா இங்கே தாதாயிசம் சுத்தமாக இப்போது குறைந்துள்ளது).
* காவல்துறையின் செயல்பாடுகள், திருப்தியாக உள்ளது. (அட! லஞ்சம், ஜெயலட்சுமி போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளை விடுத்து).
* எங்கே பிரச்சினையானாலும் நமக்கேன் வம்பு என்று கண்டுக்காமல் போகும் சுரனையற்ற மக்கள், என்னையும் சேர்த்து. என் வாழ்வு, என் குடும்பம் என்று சிறிய வட்டத்திற்குள் வழும் அதே மக்கள். பொதுமக்களுக்காக சண்டை போட்ட பேருந்து நடத்துனருக்கு, சப்போர்ட் செய்யாத மக்களை பார்த்திருக்கிறேன்.
* 350 வருட பாரம்பரியம் மிக்க பெரு நகரம். உதாரணமாக, இராயபுரம் இரயில் நிலையம் தான் தென்னிந்தியாவின் முதல் இரயில் நிலையம். தற்போது தான் இதை உணர்ந்து ஒரு கோடி ரூபாயில் அதை புதுப்பித்திருக்கிறார்கள். வருடந்தோரும் டிசம்பரில் நடக்கும் சங்கீத சபாக்களும், அதற்கு கூடும் கூட்டமே சாட்சி. தன் ஊரின் பெருமையை அறியாமலேயே உள்ள மக்கள்.
* மிகப் பரந்து விரிந்த நகரம். சைதாப்பேட்டையில் இருந்து பக்கத்தில் உள்ள தியாகராய நகரில் shopping செல்ல மிகுந்த பிரயாசை செய்யவேண்டும். கிட்டத்தட்ட அரை நாளைத் தின்றுவிடும்.
* இன்னமும், குப்பை லாரிகளும், தண்ணீர் லாரிகளும் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருக்கும் நகரம்.
* இந்தியாவின் மருத்துவ உலகின் தலை நகரம். அதாவது, வெளிநாட்டு நோயாளிகளுக்கு ராச உபசாரம்.
* தெற்கே சற்றேனும் செழிப்பாகவும், வடக்கே வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் உள்ள நகரம்.
* "அன்னாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகிலே ஓலை குடிசைக் கட்டி" இருக்கும் ஊர்.
* நிலநடுக்க வாய்ப்புள்ள நில அமைப்பில் மூன்றாவது zone-ல் உள்ள நகரம். (பெங்களூர் முதல் zone-ல் பாதுகாப்பாக உள்ளது).
* யாரும் உதவாமலேயே நிமிர்ந்து நின்று வியக்க வைக்கும் நகரம்.
* தலைவர்களின் சமாதியை இன்றும் பெருமையுடன் காட்சிப் பொருளாக(!) வைத்திருக்கும் நகரம்.
* இன்றைய வாழ்விலும் ரேடியோவை நேசிக்கும் மக்கள்.
* கண்ணகி சிலையையே எடுத்தாலும், "கண்ணகி சிலை ஒன்னு"-னு டிக்கெட் கேட்கும் குசும்பு மற்றும் தமிழனுக்கே உரித்தான எகத்தாளம். (இந்த எகத்தாளத்தை நானே சில முறை அனுபவித்திருக்கிறேன்).
* வழி கேட்டால் நின்று விலாவரியாக வழி சொல்பவரும் உண்டு, தெரியாவிட்டாலும் ஏனோதானோ என்று வழி சொல்லி அலைய வைப்பவரும் உண்டு.
* கதை, திரைக்கதை, வசனம் ஒருத்தர் எழுத, பாடல் ஒருத்தர் எழுத, இசை ஒருவர் அமைக்க, அந்த பாடலுக்கு வாய் மட்டுமே அசைக்கும் கதாநாயகனை, நாளைய முதல்வராக கட் அவுட்டிற்கு பீராபிஷேகம் செய்து பார்க்கும் "பரந்த மனப்பாண்மை" உடைய இளைஞர்கள். இளைஞர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று திரிசாவிற்கு banner வைத்து பாலாபிஷேகம் செய்யும் இளைஞிகள்.
* இரண்டு வாரங்களுக்கு முன் அடித்த வெய்யில், அப்பப்பா என் வாழ்நாளில் அனுபவித்திறாத கொடுமை. அதுவும், என் வீடு மேல் மாடி. சொல்ல வேண்டுமா? சென்னை வெய்யிலின் ஒரே ஆறுதல், கடல் இருப்பதால் காற்றின் ஈரப்பதம்.
* "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று வெளி உலகில் பொருளீட்ட போகும் தமிழன். இதற்கு contradiction-ஆக "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்".

இப்போ சொல்லுங்க சென்னையும், நானும் எப்படின்னு?

Wednesday, May 10, 2006

வீணான என் ஓட்டு

மே 8!

சரி! இந்த தடவை(யும்) ஏமாறலாம்னு, அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துகிட்டு(!), ஊருக்கு போனேன். இணையத்தின் உபயோகத்தால், நம்ம எதிர்ப்ப காட்டலாம்னு நமக்கு தரப்பட்டிருக்குற 49 ஓ option-ஐ உபயோகப்படுத்தலாம்னு தான் போனேன். என்னுடன் என் நண்பன் வெங்கியும் வந்திருந்தான். என் புண்ணியத்தில், அவனும் 49 ஓ போடலாம்னு என் கூட வந்திருந்தான். வரிசையில் நின்று கை விரலில் மை வைத்ததும் நடந்த உரையாடல்.

நான்: அங்கிருந்த பெண்மனியிடம், "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: ம்...ம்...(!!!)
நான்: "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: சரி! போங்க. (அவங்களுக்கு rules தெரியல போல, அவங்க சாதாரணமா என்னை அனுப்பினார்).
நான்: இல்ல. Form ஏதாச்சும் fill-up பன்னனுமா? Form இருக்கே.
பெண்மனி: தேவை இல்லை.
நான் சற்றே குழப்பத்துடன் வாசலை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
அந்த சமயம், அங்கிருந்த booth agents நான் வாக்களிக்காமல் வெளியேறுவதைக் கண்டு, கலவரமாகி, (அனைவரும் என் நண்பர்கள் தாம்), எல்லோரும் எழுந்து வந்து விசாரிக்க, அடுத்து வெங்கியும் 49 ஓ கேட்டு வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியிருக்கிறான். அடுத்து அங்கே ஒரே கலவரமாகியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. Election Officer நேரா என்னருகே வந்து விசாரிக்க, நான் 49 ஓ போடுவதாக கூறினேன்.
Election Officer: சார், அந்த பட்டன் இந்த தடவை வைக்கல.
நான்: சரி! Form கொடுங்க, fill-up செய்து கையெழுத்து (அ) கைநாட்டு வைக்கிறேன்.
Election Officer: எங்களுக்கு form தரப்படவில்லை.
எனக்கும் Election Officer-க்கும் வக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அதற்குள் booth agents-ம் என்னை சூழ்ந்து கொண்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின், அவர்கள் பேசியதில் இருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அதாவது, அவர்களுக்கு நான் 49 ஓ போடுவதில் விருப்பமில்லை. மேலும், நான் ஒரு கட்சியின் அனுதாபி என்று நினைத்து, மற்ற கட்சி நண்பர்கள் அமைதியானார்கள். நான் சொன்னதிலேயே உருய்தியாக இருக்க, அடுத்து வெங்கியும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான். எல்லோரும் சேர்ந்து அவனை வசை பாடி மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
இதற்கிடையில் அந்த Election Officer என்னிடம் வந்து
Election Officer: "சார்! தயவு செஞ்சு யாருக்காவது உங்க ஓட்டுப்போட்டுடுங்க. இல்லேன்னா counting-ல பிரச்சினை வந்துடும்"
நான்: Form கொடுங்க, fill-up செய்து கைநாட்டு வைக்கிறேன்(-ன்னு சொன்னதையே சொல்ல).
Election Officer: இல்ல! இங்க பிரச்சினை ஆயிடும். தயவு செஞ்சு சுயேச்சைக்காவது ஓட்டுப் போடுங்க. உங்களுக்கு பின்னால நிறைய பேர் வெயில்ல நிக்கிறாங்க பாருங்க (பார்றா!).
எனக்கு பிரச்சினையை பெரிசாக்க விரும்பலை. அங்கே நடந்த கலவரங்கள பாத்து, வரிசையில் கடைசியில் இருந்த ஒரு சுயேச்சைக்கு என் ஓட்டைப் போட்டேன்.
அங்கே இன்னும் வெங்கி சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் யாருக்காவது போட்டுட்டு வரச் சொன்னேன். அவனும் என்னைப்போல வரிசையில் கடைசியில் இருந்த அந்த சுயேச்சைக்கு ஓட்டைப் போட்டான்.
வெளியே வந்த பொழுது booth agent-ல் ஒருவன் பின்னாலேயே வந்து என்னிடமும் வெங்கியிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தான்.

(இதற்கிடையில், மற்றொரு பூத்தில் வாக்களிக்கச் சென்ற மற்ற நண்பர்கள், 17B form fill-up செய்து, வெற்றிகரமாக 49 ஓ பதிவு செய்துட வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்). ஆக, முதல் படியை எடுத்து வைச்சாச்சு.